கொரோனா கிருமிப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மறுதினம் (மே 10) முதல் இம்மாதம் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அம்மாநில அரசு இன்று (மே 8) அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் அதிகாலை 4 மணி முதல் மே 24ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு நடப்பில் இருக்கும் நாள்களில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள், தேநீர் கடைகள் அன்றாடம் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நான் நேற்று (மே 7) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தும் நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்,” என்று விவரித்தார்.