சிங்கப்பூர் தற்போது கத்திமுனையில் நிற்பதாகவும் நாட்டின் சமூகத்தொற்றுகளின் எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் கூடலாம் அல்லது குறையலாம் என்றும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (மே 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இம்மாத இறுதில் தொற்று நிலவரத்தை நாம் கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளது,” என்று அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இருப்பினும் நாம் நமது அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டது என்னவெனில், ஒரு கவனக்குறைவு அல்லது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை தொற்றுப் பரவலுக்குக் காரணமாக அமைந்தால், அது நமது சமூகத்தில் வேகமானப் பரவல் சம்பவமாக அமைந்துவிடும்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் தற்போது 10க்கும் அதிகமான கொரோனா கிருமிப் பரவல் குழுமங்கள் உள்ளன. அவற்றுள் டான் டோக் செங் மருத்துவமனைக் குழுமமே ஆகப்பெரியது. அங்கு மட்டும் 43 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
கொவிட்-19 கிருமித்தொற்று சமூகத்தில் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த சனிக்கிழமை முதல் சமூக ஒன்றுகூடல்கள் மீதான விதிமுறைகளை சிங்கப்பூர் கடுமையாக்கி உள்ளது.
கொள்ளைநோய் தொடர்பிலான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், அடுத்தடுத்து பல பொதுவிடுமுறை தினங்கள் வரவிருப்பதைச் சுட்டினார்.
நாளை மறுதினம் (மே 13) நோன்புப் பெருநாளும் மே 26ல் விசாக தினமும் கொண்டாடப்பட இருப்பதை அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சமூக ஒன்றுகூடல்கள் மீதும் வீடுகளுக்கான வருகையாளர் குறித்தும் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் இதுபோன்ற நாட்களில் சிங்கப்பூரர்களுக்கு வசதிக்குறைவு போல தோன்றக்கூடும் என்பதை திரு வோங் ஒப்புக்கொண்டார்.
“சட்டத்திற்காக மட்டுமல்லாது உணர்வோடும் விதிகளைப் பின்பற்றி ஒத்துழைக்கும், ஆக அண்மைய நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்,” என்றார் அவர்.
அவரைப்போலவே சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் சிங்கப்பூரர்களின் புரிதலுக்கு நன்றி தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று மேலும் பரவாவண்ணம் பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிப்பதை அவர்கள் தொடரவேண்டும் என்று திரு கான் வலியுறுத்தினார்.
“அண்மையில் உள்ளூரில் பரவிவரும் கிருமித்தொற்று சம்பவங்கள் நாம் இன்னும் ஆபத்தில் இருப்பதை உணர்த்துகின்றன. சமூகத்தொற்று கட்டுக்கடங்காது சென்றுவிடாத வகையில் நாம் விழிப்புடன் தொடருவது அவசியம்,” என்றார் திரு கான்.