சமூக அளவில் 10 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 3) புதிதாக 17 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் தொற்று உறுதியான அந்த 10 பேரில் எட்டுப் பேர் டான் டோக் செங் மருத்துவமனை கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள். அந்த மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கிருமித்தொற்று பரிசோதனையில் அவர்களுக்குத் தொற்று உறுதியானது.
அந்த எட்டுப் பேரையும் சேர்த்து டான் டோக் செங் மருத்துவமனை கிருமித்தொற்றுக் குழுமத்துடன் 35 பேருக்குத் தொடர்புள்ளது. சிங்கப்பூரில் தற்போது உள்ள ஒன்பது தொற்றுக் குழுமங்களில் டான் டோக் செங் மருத்துவமனை தொற்றுக் குழுமமே ஆகப் பெரியது.
சமூகத்தில் புதிதாக தொற்று உறுதியான எஞ்சிய இருவர், ஏற்கெனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,235 ஆக உள்ளது.