டான் டோக் செங் மருத்துவமனை கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையோர்: 28,000 பேரிடம் பரிசோதனை
டான் டோக் செக் மருத்துவமனை கொவிட்-19 தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடைய வேறு எவரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய சிறப்புப் பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, நேற்று (மே 10) நிலவரப்படி ஏறத்தாழ 12,500 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன், டான் டோக் செங் மருத்துவமனையின் 12,000 ஊழியர்களும் 1,000 நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்ட ஏறக்குறைய 2,500 பேரும் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அக்கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையோரில் 43 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் அம்மருத்துவமனையின் பணியாளர்கள் எழுவரும் நோயாளிகளில் இருவரும் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்கள்.
“அவர்கள் அனைவரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை அல்லது இலேசான அறிகுறிகள் காணப்பட்டன. எவருக்கும் உயிர்வாயு ஆதரவு தேவைப்படவில்லை,” என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சர்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு கான் குறிப்பிட்டார்.
தடுப்பூசியை இன்னும் முழுமையாகப் போட்டுக்கொள்ளாத எஞ்சிய 34 பேரில் அறுவருக்கு உயிர்வாயு ஆதரவு தேவைப்பட்டது என்றும் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் அமைச்சர் விளக்கினார்.