சிங்கப்பூரில் நடப்பில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள், வரும் திங்கட்கிழமையிலிருந்து (ஜூன் 14) தளர்த்தப்படவிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் ஐந்து பேர் வரை ஒன்றுகூட அனுமதிக்கப்படும். தற்போது இருவர் மட்டும் ஒன்றுகூட அனுமதிக்கப்படுகிறது.
மேலும், ஒரு வீட்டிற்கு ஐந்து விருந்தினர்கள் வரை சென்றுவர அனுமதிக்கப்படும்.
எனினும், கிருமிப்பரவலைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் அவ்வாறு ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சமூக அளவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் இரு கட்டங்களாக தளர்த்தப்படவிருப்பதாக கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இன்று (ஜூன் 10) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிலவரம் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வந்தால், ஒருவாரம் கழித்து ஜூன் 21ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும். உணவு, பானக் கடைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதிப்பது உள்ளிட்டவை அத்தகைய தளர்வுகளில் அடங்கும்.