சமூகத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் எண்மர், புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 'கேடிவி' கிருமித்தொற்றுக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
சமூகத்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவருக்கும், முன்னதாக கண்டறியப்பட்ட கொவிட்-19 நோயாளிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.
எஞ்சியவர்களில் 10 பேருக்குத் தொடர்பு இருப்பது கண்காணிப்பு முறையில் கண்டறியப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, நான்கு பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதன் தொடர்பு ஏதும் இன்னும் கண்டறியப்படவில்லை.
ஜூன் 17ஆம் தேதியன்று சமூகத்தில் 20 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நிலையாக நேற்று ஆக அதிகமான சமூகத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகிவிட்டன.
சமூகத் தொற்றுச் சம்பவங்களைத் தவிர, வெளிநாட்டிலிருந்து வந்தவர் ஏழு பேருக்கும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் இல்லத் தனிமை உத்தரவின் கீழ் வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரை அடைந்ததும் ஐவரிடம் கிருமி பாதிப்பு கண்டறியப்பட்டது. இல்லத் தனிமையில் இருந்தபோது எஞ்சிய இருவருக்கும் கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டன.
நேற்றைய 26 கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் சிங்கப்பூரின் மொத்த தொற்று எண்ணிக்கை 62,744ஐ எட்டிவிட்டது.
'கேடிவி' கிருமித்தொற்றுக் குழுமம்
உணவு, பான நிலையங்களாக தற்போது செயல்படும் 'கேடிவி' கூடங்கள் அல்லது மனமகிழ் கூடங்களுக்கு வருகை தந்திருந்த வியட்னாமிய உபசரிப்புப் பணியாளர்கள் சிலர் தொடர்பான புதிய கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்று உருவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்தது.
இதனால் 'சுப்ரீம் கேடிவி' (ஃபார் ஈஸ்ட் கடைத்தொகுதி), 'எம்ப்ரஸ் கேடிவி' (தங்ளின் கடைத்தொகுதி), 'கிளப் டொல்ச்' (பாலஸ்டியர் பாயிண்ட்) ஆகிய இடங்களில் சிறப்புப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பிடப்பட்ட மூன்று 'கேடிவி' கூடங்களுக்கோ அது போன்று செயல்படும் வேறு நிலையங்கள் அல்லது மனமகிழ் கூடங்களுக்கோ ஜூன் 29க்கும் இம்மாதம் 12க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்றவர்கள் மற்றும் வியட்னாமிய உபசரிப்புப் பணியாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இலவச கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை புதிதாக இரண்டு கிருமித்தொற்று குழுமங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
பாலஸ்டியர் பாயிண்ட் கேடிவி கூடம் தொடர்ந்து செயல்படும்
பாலஸ்டியர் பாயிண்டில் செயல்படும் 'கிளப் டொல்ச்' மனமகிழ் கூடத்தின் ஊழியர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றாலும் அந்த நிலையம் தொடர்ந்து செயல்படும் என்று அதன் உரிமையாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சு அமல்படுத்தும் சிறப்பு கொவிட்-19 பரிசோதனை ஏற்பாட்டின்கீழ் தன் ஊழியர்களைச் சோதனைக்கு அனுப்பவேண்டும் என்று அமைச்சு தன்னிடம் கூறியதாக டேரன் பே என்ற அக்கூடத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
இருப்பினும் தமது கேடிவி கூடத்தை மூடுமாறு அதிகாரிகள் இதுவரை உத்தரவிடவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர் வருகைக்காக கூடம் திறக்கப்பட்டதாக அங்குள்ள கடைக்காரர்களும் வட்டாரவாசிகளும் கூறினர். இந்நிலையில் சுத்தம் செய்யும் பணிகளுக்காக நேற்று கூடம் மூடப்பட்டது.
இதற்கிடையே எம்ப்ரஸ் கேடிவி கூடத்திற்குப் பிற்பகல் வாக்கில் உபசரிப்புப் பணியாளர்கள் வருவதைப் பார்த்திருப்பதாகவும் பெரும்பாலும் ஐவர் கொண்ட குழுக்களாக அவர்கள் வருவதாகவும் கூடத்தின் பக்கத்தில் அமைந்துள்ள 'மேத் விஷன்' வளமூட்டு நிலையத்தின் பிரிவுத் தலைவர் திரு விநாயக் மோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
"குட்டைப் பாவாடைகளில் இளம்பெண்கள் குழுக்களாக வருவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் தினமும் நான்கு முறையாவது இங்கு வந்து போனாலும் மாலை வேளையில் கேடிவி திறக்கும்போது தூதர்கள் அங்கு இருப்பதில்லை," என்றார் அவர்.