புதிதாக 60 பேர் பாதிப்பு; சமூகத்தில் 56 பேருக்குக் கிருமித்தொற்று; 41 பேருக்கு கேடிவி தொடர்பு
சிங்கப் பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 60 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளானார்கள். சமூகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 56 பேர் அவர்களில் அடங்குவர். சமூக பாதிப்புக்கு ஆளானவர்களில் 41 பேர் கேடிவி தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள். அவர்களில் டிரீம் குரூய்சஸ் உல்லாச கப்பலில் இருந்த 40 வயது பயணியும் ஒருவர்.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்திறங்கிய நான்கு பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் 17 பேர் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். 33 பேர் முந்தைய கொவிட்-19 நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். வழக்கமான கண்காணிப்பின் மூலம் அவர்களுக்கு தொற்று இருந்தது தெரியவந்தது.
புதிதாக கிருமி தொற்றியவர்களில் ஆறு பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
நேற்று புதிதாக கிருமி தொற்றியவர்களையும் சேர்த்து கேடிவி குழுமத்தொற்றின் அளவு 54 பேராகி இருக்கிறது. இந்தத் தொற்றுக் குழுமம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய குழுமங்களில் ஒன்றாகி உள்ளது.
இதனிடையே, இந்த நிலவரம், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதை பாதிக்குமா என்பது பற்றி கருத்துரைத்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், இது பற்றி ஆழமாக விவாதித்ததாகவும் இப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதில் மாற்றமிராது என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் முன்பைவிட இப்போது அதிக மீள்திறனுடன் திகழ்கிறது. மக்கள்தொகை யில் 70%க்கும் அதிகமானவர்கள் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 40%க்கும் அதிகமானவர்கள் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு உள்ளனர் என்பதை நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் எடுத்துக் கூறினார்.
கேடிவி குழுமத் தொற்று ஏமாற்றம் தருவதாக குறிப்பிட்ட அவர், இருந்தாலும் இது முற்றிலும் தனக்கு வியப்பளிக்கவில்லை என்றார். உருமாறிய டெல்டா கிருமி வேகமாக பரவக்கூடியது என்பதை அவர் சுட்டினார்.
கேடிவி மனமகிழ் கூடங்கள், இரவு நேர விடுதிகளுக்குச் சென்றிருப்பவர்கள், அங்கு பணிபுரிந்த உபசரிப்பாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.
கேடிவி கூடங்களுக்கு எதிராகவும் அந்த உபசரிப்பாளர்களுக்கு எதிராகவும் போலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றாரவர்.
இதனிடையே, சுப்ரீம் கேடிவி (ஃபார் ஈஸ்ட் கடைத்தொகுதி), எம்பிரஸ் கேடிவி (தங்ளின் கடைத்தொகுதி), கிளப் டோல்சி (பாலஸ்டியர் பாயிண்ட்), டபிள்யுயூ பிஸ்ட்ரோ பிரைவேட் லிமிடெட் (கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ்), கிளப் டி சாரா பிரைவேட் லிமிடெட் (டெக்ஸ்டைல்ஸ் சென்டர்) ஆகியவற்றுக்கு ஜூன் 29ஆம் தேதிக்கும் ஜூலை 13ஆம் தேதிக்கும் இடையில் யாரேனும் சென்று வந்திருந்தால் அவர்கள் இலவச பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கூறி இருக்கிறது.
உணவு, பான நிலையமாகச் செயல்படும் கேடிவி கூடங்கள் அல்லது மனமகிழ் நிலையங்களுக்குச் சென்று வந்திருப்போரும் அந்தக் கூடங்களில் பணிபுரிந்த வியட்னாமிய உபசரிப்பாளர்களுடன் கலந்துறவாடி இருப்போரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென அமைச்சு கூறியது.
இந்த நிலையங்களுக்குச் சென்று வந்திருப்போர், இரு வாரங்களுக்கு தங்கள் உடல்நிலையைக் கண்காணித்து வர வேண்டும். யாருக்காவது கொவிட்-19 அறிகுறி தெரிந்தால் அவர்கள் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
கொவிட்-19 தொற்றுள்ளவர்களுடன் அணுக்கத் தொடர்பில் இருந்தவர்கள் தடமறிதல் மூலம் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
வியட்னாமிய பயணியே முதல் நபர்
கேடிவி கொவிட்-19 தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடைய முதலாவது நபர் வியட்னாமில் இருந்து குறுகியகால விசாவில் இங்கு வந்த ஒரு பெண் என்று சிங்கப்பூரின் மருத்துவச் சேவைத் துறை இயக்குநர் கென்னத் மாக் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுவாசப் பிரச்சினை காரணமாக அந்த மாது ஜூலை 11ஆம் தேதி பொது மருத்துவரிடம் சென்ற போது கொவிட்-19 தொற்று இருந்தது தெரிய வந்ததால் உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் பல கேடிவி கூடங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. பிறகு தடமறிதல் மூலம் இதர பலருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.