லிட்டில் இந்தியாவில் புளோக் 639 ரோவெல் ரோட்டில் உள்ள இரு வீடுகளில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (ஜூலை 15) தெரிவித்துள்ளது.
“தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் பணிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிருமி எவ்வாறு தொற்றியது என்பது பற்றிய விசாரணையும் நடைபெற்றது வருகின்றன,” என்று அது கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனையைத் தான் நடத்தவிருப்பதாக அமைச்சு கூறியது.
புளோக் 636 வீராசாமி சாலையில் உள்ள கூடாரப் பகுதியில் நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பரிசோதனை நடத்தப்படும்.
பாதிக்கப்பட்ட அந்த புளோக்கிற்கு ஜூன் 30 முதல் நேற்று (ஜூலை 14) வரை சென்று வந்தவர்கள், அல்லது அங்கு வசிப்போருடன் தொடர்பில் இருந்தவர்கள் விருப்பப்பட்டால் சளி/எச்சில் மாதிரி பரிசோதனை செய்துகொள்ள பதிவு செய்யலாம்.
அவர்களுக்கான பரிசோதனைகள் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும். பிரத்தியேக வட்டார பரிசோதனை மையங்களில் நாளையும் நாளை மறுதினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பரிசோதனை நடைபெறும்.