18 வயதும் அதற்கும் மேற்பட்டோர்
பதினெட்டு வயதும் அதற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யத் தேவையின்றி, 11 சமூகத் தடுப்பூசி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதியில் இருந்து 60 வயதும் அதற்கும் மேற்பட்டோர்க்கு முன்பதிவின்றி நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு, 18 வயதிற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் அனைவரும் முன்பதிவின்றி, நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வழிவகை செய்துள்ளது.
போன விஸ்தா, ஹோங் கா நார்த், கெபுன் பாரு, கொலம் ஆயர், மார்சிலிங், பொத்தோங் பாசிர், பொங்கோல் 21, ராடின் மாஸ், தெம்பனிஸ் ஈஸ்ட், உட்லண்ட்ஸ், இயூ டீ ஆகிய சமூக மன்றங்களில் அந்த 11 சமூகத் தடுப்பூசி நிலையங்கள் அமைந்து உள்ளன.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 31) நிலவரப்படி, சிங்கப்பூர்வாசிகளில் 61 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 7.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 4.3 மில்லியன் பேர் குறைந்தது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்; 3.3 மில்லியன் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதுவரை, 60 வயதும் அதற்கும் மேற்பட்டோரில் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
அதுபோல, 45-59 வயதுப் பிரிவினரில் 88 விழுக்காட்டினரும், 40-44 வயதுப் பிரிவினரில் 87 விழுக்காட்டினரும், 12-29 வயதுக்குட்பட்டோரில் 83 விழுக்காட்டினரும் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு, தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறது.