மலேசியாவின் ஆளும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய தோழமைக் கட்சியான அம்னோ, பிரதமர் முகைதீன் யாசினின் அரசாங்கத்துக்கு அளித்துவந்த ஆதரவை மீட்டுக்கொண்டுள்ளது.
இன்று மாலை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் அக்கட்சி தனது முடிவை செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, முகைதீன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எரிசக்தி, இயற்கைவள அமைச்சர் ஷம்சுல் அனுவார் நஸாரா அம்னோவின் விசுவாம்மிக்க உறுப்பினர் என்ற முறையில் கட்சியின் முடிவுக்கு இணங்க, அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
“லெங்கோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது தொகுதியின் விவகாரங்களிலும் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் தீவிரம் காட்டவுள்ளேன்,” என்று அம்னோவின் அறிக்கையில் திரு ஷம்சுல் குறிப்பிட்டார்.
பிரதமர் முகைதீனுக்கும் நாட்டின் மாமன்னருக்கும் இடையே கடந்த வாரம் நிகழ்ந்த வெளிப்படையான சர்ச்சைக்குப் பிறகு, ஆளும் கூட்டணியில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்னோ, மாமன்னருக்குத் தங்கள் உறுதியான விசுவாசத்தை வலியுறுத்தும் வகையில் திரு முகைதீன் அரசாங்கத்துக்கு வழங்கிவந்த ஆதரவை மீட்டுக்கொள்வதாக அம்னோவின் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான திரு அஹமது ஸாஹிட் ஹமிடி இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவித்தார்.
(இச்செய்தியின் விரிவாக்கம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில் இடம்பெறும்)