ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் அருகே குறைந்தது இரண்டு குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன என்று அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.
அந்த குண்டுவெடிப்புகளில் பொதுமக்களும் அமெரிக்க அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்ஸாய் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், விமான நிலையத்துக்கு வெளியே தாலிபன்களும், விமான நிலையத்துக்கு உள்ளே ஆப்கன் படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்வசமாகிவிட்டதால், அதன் ஆட்சிப் பிடியிலிருந்து தப்பிக்க விரும்பி, பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவ்விமான நிலையத்திலிருந்து இதுவரை 82,000க்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 31ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் தங்களது குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை பல நாடுகளும் விரைவுபடுத்தியுள்ளன.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் நேற்றும் காபூல் விமான நிலைய நுழைவாயில்களின்முன் ஏராளமானோர் திரண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், காபூல் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதை அமெரிக்காவின் ராணுவ தளமான பென்டகன் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தனது ட்விட்டர் பக்கத்தில், "காபூல் விமானநிலையத்திற்கு வெளியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளதை உறுதிப்படுத்துகிறோம். ஆனால், அங்கு உயிரிழப்பு பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. தகவல் கிடைத்தவுடன் தெரியப்படுத்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.