வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐஎஸ் அமைப்பால் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே தனது குடிமக்கள் காபூல் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என அமெரிக்காவும் ஜெர்மனியும் கேட்டுக்கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே கூடும் நிலையிலும் அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையிலும் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.
கூட்டநெரிசலில் சிக்கி ஏழு ேபர் மாண்டுவிட்டதாகவும் அங்கு நிலவும் சூழலைச் சமாளிப்பது மிகவும் சவாலாக உள்ளது என்றும் பிரிட்டன் கூறியுள்ளது.
அமெரிக்க அரசு தரப்பிலிருந்து, பயணம் மேற்கொள்ளுமாறு கூறப்பட்டிருப்பவர்கள் மட்டும் காபூல் வந்தால் போதும் எனக் கூறியுள்ளது அமெரிக்கா.
ஆஃப்கானிஸ்தானில் நிலவும் சூழலைக் கண்காணித்து வருவதாகவும், மாற்று வழிகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் தீவிரவாத தாக்குதல் குறித்து வேறு எந்த விவரங்களையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அதோடு தாக்குதல் நடத்தப்படும் என்று ஐஎஸ் அமைப்பும் மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை.
காபூலில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் தனது குடிமக்களை மீட்கும் பணியை ஒத்திவைத்துள்ளதாகவும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் தலிபான் அமைப்பின் இணை நிறுவனர் அப்துல் கனி பராதர் காபூலுக்குச் சென்றுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட மற்ற உலக நாடுகளுடன் தாங்கள் நல்லுறவைப் பேண விரும்புவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தலிபானின் சட்ட, சமய, வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் அடுத்த சில வாரங்களில் புதிய ஆட்சி கட்டமைப்பிற்கான திட்டங்களை முன் வைப்பார்கள் என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.