தொற்று அதிவேகமாகப் பரவுவதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை அறிவித்த சுகாதார அமைச்சு
கொவிட்-19 தொற்று அதிவேகமாக அதிகரிப்பதைத் தடுக்க, கூடுதலானோருக்கு அடிக்கடி பரிசோதனைகள் செய்வது, கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது உள்ளிட்ட புதிய கிருமிக் கட்டுப்பாடு நட வடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் தொற்று எண் ணிக்கை இரட்டிப்பானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த வாரம் 1,200 பேருக்கு கிருமி தொற்றியது. ஒப்புநோக்க அதற்கும் முந்தைய வாரம் 600 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.
புதிய நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்னும் அதிகமான துறைகளில் ஊழியர்களுக்கு விரைவு சுயபரிசோதனைகள் கட்டாயமாக்கப்படும். இது பட்டியலிட்ட அட்டவணை முறையில் நடைபெறும்.
கொவிட்-19 கிருமி எதிர்ப்புக்கான அமைச்சுகள் நிலைப் பணிக்குழு நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் நிதி அமைச்சரும் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் இதைத் தெரிவித்தார்.
தற்போது, உணவு, பான விடுதிகள், தனிப்பட்ட பராமரிப்புச் சேவைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற அதிக தொற்று அபாயம் உள்ள இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும்.
இனி, கடைத்தொகுதி ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் பொருட்களையும் உணவையும் விநியோகித்து ஒப்படைக்கும் ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் போன்ற பொதுப் போக்குவரத்து முன்கள ஊழியர்கள், தனியார் கார் ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு விரைவுப் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்படும்.
முன்னதாக இரு வாரத்துக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த விரைவுப் பரிசோதனைகள் இனி வாரம் ஒருமுறை நடைபெறும் என்று திரு வோங் கூறினார்.
தற்போதுள்ள நடைமுறைபோல முதலாளிகள், ஊழியர்களுக்கான இந்த சுயபரிசோதனைகளை மேற்கொள்வார்கள். இந்த மேம்பட்ட திட்டத்தின் கீழ், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுக்கும் அதைப் போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கும் பரிசோதனைகளுக்கு ஆகும் செலவுக்கான கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.
இந்தப் பரிசோதனைத் திட்டம் பற்றிய மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
சுகாதார அபாய எச்சரிக்கைகள்
மேலும், புதிய தொற்றுக் குழுமங்கள் கண்டுபிடிக்கப்படும்போது, தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதார அபாய எச்சரிக்கைகளையும் அறிவிப்புகளையும் அரசாங்கம் அனுப்பும். தொற்றுக்குழுமங்களை விரைவில் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம் என்றது அமைச்சு.
இந்த எச்சரிக்கைகள், இல்லத் தனிமை உத்தரவுகள் அல்ல.
எனினும் சுகாதாரப் பராமரிப்பு எச்சரிக்கைகளைப் பெறுவோர் சட்டப்படி ‘பிசிஆர்’ பரிசோதனையைச் செய்துகொண்டு, முதல் பரிசோதனையின் முடிவு வரும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் ஏஆர்டி எனும் விரைவுப் பரிசோதனையையும் 14ஆம் நாளில் மீண்டும் பிசிஆர் கிருமிப் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும் என்றார் திரு வோங்.
சுகாதார அபாய எச்சரிக்கைகளையும் சுகாதார அறிவிப்புகளையும் பெறுபவர்கள் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பதை 14 நாட் களுக்கு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கூடுதல் கட்டுப்பாடுகளையோ கிருமி எதிர்ப்பு நடவடிக்கை களையோ மேற்கொள்ளாமல் தொற்றுப் பரவலைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என்று அமைச்சர் கூறினார்
இங்கு அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதால்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மத்தியில் கடும் நோயையும் மரணங்களையும் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால் தடுப்பூசி போடாதவர்களுக்கு தொற்று அபாயம் தொடர்கிறது.
“அதனால் தொற்று அதிவேகமாவதைத் தடுக்க இப்போதே துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்,” என்றார் திரு வோங்.