சமூக ஒன்றுகூடலில் இடம்பெறுவோர் வரம்பு ஐவரில் இருந்து குறைப்பு
வெகுவேகமாக உயர்ந்து வரும் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் தனது கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.
அதன்படி, சமூகத்தில் ஒன்றுகூடுவோர்க்கும் உணவகங்களில் சேர்ந்து உண்போர்க்குமான வரம்பு இப்போது ஐவராக இருக்கும் நிலையில், அது இருவராகக் குறைக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு 27ஆம் தேதி திங்கட்கிழமையிலிருந்து நடப்பிற்கு வரும்.
புதிய கட்டுப்பாடுகள் ஒரு மாத காலத்திற்கு நீடித்திருக்கும். அடுத்த மாதம் 25ஆம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதே வேளையில், இரு வாரங்களுக்குப் பின் நிலைமை மறுஆய்வு செய்யப்பட்டு, சமூகத்தில் கிருமிப் பரவலைப் பொறுத்து, அதற்கேற்ப கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம்.
சுகாதாரப் பராமரிப்பு அமைப்பைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்காமல் இருக்க, கொரோனா பரவலைத் தடுக்க இந்தக் கடினமான முடிவு அவசியமானது என்றும் வீட்டிலிருந்தபடி குணமடைதல் மற்றும் இல்லப் பராமரிப்பு சேவைகளை அதிகரிக்க கால அவகாசம் தேவை என்றும் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கின் யோங் நேற்று தெரிவித்தார்.
"இந்த அறிவிப்பால் பல சிங்கப்பூரர்களும் வர்த்தகங்களும் ஏமாற்றமடைவர் என்பதை அறிந்துள்ளேன். ஆயினும், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூற விரும்புகிறேன்," என்று கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு கான் சொன்னார்.
"இந்தப் பயணம் நீண்டதாக இருக்கலாம். அதன்மூலமே, மறுதிறப்பை நாம் பாதுகாப்பாகச் செய்ய முடியும். இப்போதைய கொரோனா அலையில் இருந்தும் எதிர்காலத் தொற்றுகளையும் கடந்துவர இப்படிச் சில மாற்றங்களைச் செய்யும் வேளையில், பொதுமக்கள் பொறுமைகாத்து, ஆதரவளிக்க வேண்டுகிறோம்," என்று திரு கான் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் புதிதாக கிட்டத்தட்ட 1,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த வாரத்தில் அன்றாட பாதிப்பு 3,000ஐ எட்டக்கூடும்.
இந்நிலையில், நாளொன்றுக்கு 5,000 புதிய பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும் வகையில் சிங்கப்பூர் தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
$650 மில்லியன் ஆதரவுத் திட்டம்
இவ்வேளையில், வேலை ஆதரவுத் திட்ட மானியங்கள், டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கான வாடகைத் தள்ளுபடிகள், உதவிகள் என $650 மில்லியன் ஆதரவுத் திட்டத்தை நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். அண்மைய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு உதவும் நோக்கில் இத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கையிருப்பு நிதியில் இருந்து பணம் பெறப்படாது.
இதனிடையே, அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் புதிய அறிவிப்புகள், கொவிட்-19 மீள்திறன்கொண்ட நாடு என்ற பாதுகாப்பான நிலையை சிங்கப்பூர் எட்ட உதவும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
"முதலாவதாக, நமது சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின் கொள்திறனைப் பாதுகாத்து வருகிறோம். அடுத்து, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட கொவிட்-19 நோயாளிகள் வீட்டிலேயே குணம் அடைவதற்கான நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறோம். அம்முயற்சிகளில் சுகாதார அமைச்சிற்கு சிங்கப்பூர் ஆயுதப் படை கைகொடுத்து வருகிறது. இறுதியாக, புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கிறோம்," என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக சிகிச்சை வளாகங்களில் அதிகமான கொவிட்-19 நோயாளிகளை அனுமதிப்பதன்மூலம் மோசமாக பாதிக்கப்படுவோர்க்காக மருத்துவமனைகளில் படுக்கைகளைத் தயார்நிலையில் வைத்து இருக்க முடியும் என்றார் அவர்.
'பூஸ்டர்' தடுப்பூசி போடவும் இன்னும் தடுப்பூசி போடாதோர்க்குத் தடுப்பூசி போடவும் புதிய நடவடிக்கைகள் கூடுதல் கால அவகாசம் அளிக்கும் என்று திரு லீ குறிப்பிட்டார். நமது மருத்துவமனைகளின் கொள்திறனையும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.