கொவிட்-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் 66 முதல் 96 வயதிற்குட்பட்ட எண்மர் உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து, மாண்டோர் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துவிட்டது.
மாண்டவர்களில் ஆடவர் எழுவரும் பெண் ஒருவரும் அடங்குவர். அவர்களுள் நால்வர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை. இருவர் முழுமையாகவும் இருவர் பகுதியளவும் தடுப்பூசி போட்டிருந்தனர்.
அவர்கள் அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகள் இருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொடர்ந்து 12வது நாளாக கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதனிடையே, சிங்கப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக 2,909 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்களில் 2,079 பேர் சமூகத்தினர், 818 பேர் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், 12 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
பாதிக்கப்பட்டோரில் 556 பேர் 60 வயதைத் தாண்டியவர்கள்.
இதனையடுத்து, மொத்த பாதிப்பு 99,430 ஆனது.
பத்துக் கிருமித்தொற்றுக் குழுமங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது. எட்டு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள், பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம், உட்லண்ட்ஸ் பராமரிப்பு இல்லம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
இந்தப் பத்து இடங்களிலும் புதிதாகப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
பைனியர் ரோடு நார்த்தில் அமைந்துள்ள புளூ ஸ்டார்ஸ் தங்குவிடுதியில் மேலும் 21 பேரை கொரோனா தொற்ற, அக்குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 442ஆகக் கூடியது.
நேற்றைய நிலவரப்படி, 1,356 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, அதற்கு முந்திய நாளைவிட நான்கு குறைவு.
அவர்களில் 222 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது; 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.