தொடக்கநிலை 3, 4ல் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து கூடி வருவதையடுத்து, கல்வி அமைச்சு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
இதனால் ஏறக்குறைய 70,000 மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று அறியப்படுகிறது.
ஆயினும், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுடன் தொடக்கநிலை 5 மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
தொடக்கநிலை 1, 2 மாணவர்கள் ஆண்டிறுதித் தேர்வு எழுதுவதில்லை.
வரும் 11ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து தொடக்கநிலை 3 முதல் 6 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும். தொடக்கநிலை 1, 2 மாணவர்கள் 13ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து பள்ளிக்குத் திரும்புவர்.
சென்ற மாதம் 27ஆம் தேதியில் இருந்து தொடக்கநிலை 1-5 மாணவர்கள் வீட்டிலிருந்தபடி கற்று வருகின்றனர்.
தொடக்கநிலை 1-5 மாணவர்களின் பெற்றோர்கள், நாளை 8ஆம் தேதி அல்லது நாளை மறுநாள் 9ஆம் தேதி தங்களின் பிள்ளைகளிடம் ‘ஏஆர்டி’ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகளைத் தங்களுக்கு அனுப்பப்படும் ஓர் இணைப்பின் வழியாக அவர்கள் தெரிவிக்க வேண்டும்.