ஜூரோங் தங்குவிடுதியில் ஊழியர்கள் அதிருப்தி; கலவரக் கட்டுப்பாட்டு போலிசார் வரவழைப்பு

ஜூரோங் தங்குவிடுதியில் ஊழியர்கள் அதிருப்தி; கலவரக் கட்டுப்பாட்டு போலிசார் வரவழைப்பு

1 mins read
265aa52d-a8eb-436a-a0f8-9653694599e1
-
Google News Preferred Icon

ஜூரோங்கில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊழியர் தங்கும் விடுதியில் வசதியின்மை, கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு தக்க நேரத்தில் மருத்துவ உதவியை பெற முடியாமை உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்காக ஊழியர்கள் போராட்டம் நடத்தியதில் அங்கு குழப்பம் நிலவியது. வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் எனப்படும் அந்தத் தங்குவிடுதியில் ஊழியர்கள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியைக் காட்டும் படங்களும் காணொளிகளும் செவ்வாய்க்கிழமை முதல் இணைய ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. ஊழியர்கள் சிலர் நேற்று ஒன்றாகத் திரண்டு விடுதியின் நிர்வாகத்தினரைச் சந்தித்துப் பேசியபோது பிரச்சினை முற்றிப்போனது. பிறகு, கலவரக் கட்டுப்பாட்டுப் போலிசார் வரவழைக்கப்பட்டனர். விடுதியில் வசிக்கும் 2,000 ஊழியர்களில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் 'வீசாட்' எனப்படும் சமூக ஊடகத்தில் கூறியுள்ளனர். எனினும், தங்களுக்கு போதிய மருத்துவ ஆதரவு வழங்கப்படவில்லை என்றும் தாங்கள் முறையாகத் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

Watch on YouTube

கிருமிதொற்றியவர்கள் விடுதியின் தாழ்வாரங்களிலும் விடுதி அறைகளுக்கு வெளியேயுள்ள நடைபாதைகளிலும் படுத்திருக்கும் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. மருத்துவப் பராமரிப்பு கிடைக்கும் வரையில், தங்களுடன் அறையில் தங்கியிருக்கும் மற்றவர்களுக்கும் கிருமி தொற்றாமல் இருக்க தாங்கள் அவ்வாறு படுத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவ வசதி போதாமையால் தாம் எரிச்சல் அடைந்ததாக திரு ரென் என்று மட்டுமே தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட 41 வயது ஊழியர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

Watch on YouTube