கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட புதிய பணிப்பெண்களை சிங்கப்பூருக்கு அழைத்துவர விண்ணப்பிக்கும் நடைமுறை இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொண்ட பணிப்பெண்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வரலாம்.
இதுபற்றி நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், “அரசாங்கம் நுழைவு அனுமதி வரம்பை அதிகரித்திருந்தாலும், பொதுச் சுகாதாரக் காரணங்களுக்காகவும் குடும்பங்களின் பராமரிப்புத் தேவையைப் பொறுத்தும் அந்த எண்ணிக்கை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கப்படும். நுழைவு அனுமதி கோரி அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால், சிலருக்கு உடனடியாக நுழைவு அனுமதி கிடைக்காமல் போகலாம். அவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்,” என்று கூறினார்.
உடனடியாக இல்லப் பணிப்பெண்கள் தேவைப்படுவோர் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவைகள் சங்கம் நடத்தும் வர்த்தகத் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், நான்கு மாதங்களுக்குமுன் இந்த முன்னோட்டத் திட்டம் தொடங்கப்பட்டது.
வெளிநாட்டுப் பங்காளிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றும் அச்சங்கம், பணிப்பெண்கள் அவர்கள் நாட்டிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கு முன் கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணிப்பெண்கள் இத்திட்டத்தின்மூலம் இவ்வாண்டு ஜூலையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
இத்திட்டத்தின்மூலம் சிங்கப்பூருக்கு வரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பணிப்பெண்கள், இங்கு வந்து சேர்ந்த இரண்டு மாதங்களுக்குள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டும்.