தமிழகத்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டாலும் மேலும் ஓராண்டு காலத்திற்கு கொரோனா விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டிய தேவை இருக்குமென சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாநிலத்தில் இப்போது தொற்று கட்டுப்பட்டு இருப்பதாகவும் இருந்தாலும் பண்டிகைகள் வருவதால் அடுத்த நான்கு முதல் ஆறு வார காலம் மிகவும் எச்சரிக்கையாக இருந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் குறைந்தபட்சம் அடுத்த ஓராண்டு காலத்திற்கு கொவிட்-19 விதிகளை மக்கள் பின்பற்றி நடந்துகொள்ளவேண்டி இருக்கும் என்றார் அமைச்சர்.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் மறுபடியும் தொற்று தலை எடுப்பதைச் சுட்டிய அமைச்சர், தமிழ்நாட்டில் மறுபடியும் தொற்று தீவிரமாகத் தலைதூக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றார்.
இரண்டாவதாக, கொரோனா வைத் துடைத்து ஒழிக்க மாநிலத்தில் தடுப்பூசி செயல்திட்டத்தைத் தொடர வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து அதை அரசாங்கம் தீவிரமாக கையில் எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்கள்தொகையில் 70%க்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் போட்டுவிட்டால் கொரோனா 3வது அலையைத் தவிர்த்துவிடலாம் என்று இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிய அமைச்சர், தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெற்றுள்ள 50.8 மில்லியன் (5.8 கோடி) மக்களில் 69 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
மக்கள்தொகையில் இதுவரை 29 விழுக்காட்டினர் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது இந்தியா முழுவதற்குமான தேசிய அளவைவிட (31%) சற்றுக் குறைவு என்ற அமைச்சர், என்றாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர்க்கு ரேஷன் பொருள்கள் கிடைக்காது என்பது போன்ற தடை எதையும் விதிக்கும் எண்ணம் இல்லை என்றார்.