பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரயீசா கான், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தாம் பொய் சொன்னதாக நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து விசாரணைக் குழு முன்பு அவர் முன்னிலையாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பகிர்ந்துகொண்ட சம்பவத்தை மீட்டுக் கொள்வதாகவும் பொய் கூறியதற்கு தம்மை மன்னிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமக்கு 18 வயதாகும்போது தாமே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் அந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் சொன்னதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய ரயீசா கான், மூன்று ஆண்டு களுக்கு முன்பு பாலியல் பலாத் காரத்தால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணுடன் புகார் அளிக்க போலிஸ் நிலையத்துக்குச் சென்ற தாகவும் அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்த போலிஸ் அதிகாரி ஒருவர், பெண் அணிந்திருந்த உடை, மதுபழக்கம் குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதாக வும் கூறியிருந்தார்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தான் போலிஸ் நிலையத்துக்குச் செல்லவில்லை என்று நாடாளுமன்றத்தில் ரயீசா கான் நேற்று தெரிவித்தார். மாறாக, அந்தப்பெண், மகளிர் ஆதரவுக் குழுவிடம் கூறியதை அவர் அனு மதியில்லாமல் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
நாடாளுமன்றத்தில் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து ரயீசா கூறியபோது அதுபற்றி விசாரணை நடத்த விவரம் தருமாறு சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் வலியுறுத்தினார்.
ஆனால் ரயீசா கான் மேல் விவரம் தர மறுத்துவிட்டார்.
காவல்துறையினர் அவரிடம் விவரம் கேட்டும் அதற்குப் பலன் இல்லாமல்போனது.
இதனால், காவல்துறையே அப்படியொரு சம்பவம் நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தியது. அந்தச் சம்பவத்தை காவல்துறையினரால் கண்டு பிடிக்க முடியாததால் அப்படியொரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று காவல்துறை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் ரயீசா கான் பொய் சொன்னதாக நேற்று ஒப்புக் கொண்டுள்ளார்.
செங்காங் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், மூன்று சமயங்களில் பொய் சொன்னதாகவும் கூறினார்.
இதையடுத்து நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று வலியுறுத்திய அவைத் தலைவர் இந்திராணி ராஜா, ரயீசா மீது அதிகாரபூர்வ புகாரைப் பதிவு செய்தார். "இந்த விவகாரம் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். அது, நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கும். இதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின்னும் ஒப்புதல் அளித்துள்ளார்," என்று நேற்று நாடாளுமன்றத்தில் இந்திராணி ராஜா தெரிவித்தார்.