இந்தியாவில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பயணிகள், தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய தேவையின்றி நவம்பர் 29 முதல் சிங்கப்பூர் வரலாம். இந்தோனீசியப் பயணிகளுக்கும் இந்த ஏற்பாடு (விடிஎல்) நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நாடுகளுடன் கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இருந்தும் பயணிகள் டிசம்பர் 6 முதல் சிங்கப்பூர் வரமுடியும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத் திட்டம் நீட்டிக்கப்பட்டு, அதில் இப்போது இந்த நாடுகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இந்த ஏற்பாடுகள் பற்றிய மேல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நேற்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
சிங்கப்பூரில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய தேவையின்றி இந்தோனீசியா செல்வதற்கு இதுவரை கதவு திறக்கவில்லை.
இருந்தாலும் இந்தியா, கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பயணிகள் சிங்கப்பூர் வந்து செல்லலாம். இந்த நாடுகள் சிங்கப்பூர் பயணி களுக்கு ஏற்கெனவே எல்லை களைத் திறந்து உள்ளன.
இத்தகைய ஏற்பாட்டின்கீழ் உள்ள அந்தந்த நாடுகளின் நிபந்தனைகளைச் சரிபார்த்துக்கொள்ளும்படி பயணிகளுக்கு ஆணையம் ஆலோசனை கூறியது.
இதனிடையே, நேற்று நடந்த கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், இந்த விமானப் பயணத் திட்டத்தில் இப்போது சேர்க்கப்பட்டு இருக்கும் நாடுகள் முக்கியமானவை என்பதைச் சுட்டினார்.
எடுத்துக்காட்டாக, சாங்கி விமான நிலையத்தில் 2019ல் வந்திறங்கிய பயணிகளில் ஏறத்தாழ 7 விழுக்காட்டினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.
இப்போதைய நாடுகளையும் சேர்த்து தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தனிமை உத்தரவற்ற பயணத் திட்டத்தில் மொத்தம் 21 நாடுகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.