சிங்கப்பூர்-மலேசியா தரைவழி 'விடிஎல்' பயணம்: முதற்கட்டமாக 2,880 பேர்க்கு அனுமதி
இம்மாதம் 29ஆம் தேதி திங்கட்கிழமை முதல், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என மலேசியாவில் இருந்து ஒவ்வொரு நாளும் 1,440 பேர்வரை உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக சிங்கப்பூருக்கு வர முடியும்.
பிரத்தியேகப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தி அவர்கள் இங்கு வந்திறங்கியபின் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
அதேபோல, சிங்கப்பூரில் இருந்து மலேசியர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என 1,440 பேர் வரை மலேசியாவிற்குச் செல்ல முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நிலவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் (விடிஎல்) இதற்கு வழிவகை செய்கிறது.
இத்திட்டத்தின்கீழ் இயக்கப்படும் பிரத்தியேக பேருந்துச் சேவைகளுக்கான பயணச்சீட்டுகள் இன்று காலை 8 மணியில் இருந்து விற்பனைக்கு விடப்படும்.
சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்வதற்கான பயணச்சீட்டுக் கட்டணம் பெரியவர்களுக்கு $15, சிறார்களுக்கு $8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான பயணச்சீட்டு, பெரியவர்களுக்கு 20 ரிங்கிட்டுக்கும் சிறுவர்களுக்கு 10 ரிங்கிட்டுக்கும் விற்கப்படும்.
நிலவழி 'விடிஎல்' திட்டத்தின்கீழ் பயணம் செய்வோர், தாங்கள் செல்லவிருக்கும் நாட்டின் குடிமக்களாகவோ நிரந்தரவாசிகளாகவோ அல்லது நீண்டகால அனுமதி அட்டைதாரர்களாகவோ இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர்-மலேசியா நில எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தத்தம் நாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து வாழும் ஊழியர்கள், அவர்களை மீண்டும் சந்திக்க இந்த ஏற்பாடு முன்னுரிமை அளிக்கிறது.
தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி, துவாஸ் இரண்டாவது பாலம் வழியே சிங்கப்பூர்- மலேசியா இடையே மீண்டும் பயணத்தைத் தொடங்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"தரைவழி விடிஎல் பயணத் திட்டத்தைத் தொடங்குவது, இரு நாட்டு மக்களையும் பொருளியல்களையும் மீண்டும் இணைப்பதற்கான ஒரு பெரிய நடவடிக்கை. இது, இருதரப்பு உறவுகளை இன்னும் மேம்படுத்தும்," என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, அன்றாடம் ஒவ்வொரு திசையிலும் 32 பேருந்துச் சேவைகள் இயக்கப்படும். ஒரு பேருந்தில் 45 பேர்வரை பயணம் செய்யலாம். காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை, அரைமணி நேர இடைவெளியில் அவை இயக்கப்படும்.
சிங்கப்பூரின் 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவனம், ஜோகூரின் லார்கின் சென்ட்ரல் பேருந்து முனையம் - உட்லண்ட்ஸ் தற்காலிகப் பேருந்து நிலையத்திற்கு இடையே நாள்தோறும் 32 பேருந்துச் சேவைகளை இயக்கும். அதேபோல், மலேசியாவின் ஹண்டால் இண்டா (காஸ்வே லிங்க்) நிறுவனம், லார்கின் சென்ட்ரல் - குவீன் ஸ்திரீட் முனையத்திற்கு இடையே 32 பேருந்துச் சேவைகளை இயக்கும்.