கிருமித்தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து புதுடெல்லி சென்றடைந்த மேலும் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் இன்று (டிசம்பர் 2) இத்தகவலைத் தெரிவித்தனர்.
நள்ளிரவில் தரையிறங்கிய ஏர் ஃபிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்த மூவருக்கும் லண்டனிலிருந்து வந்த பயணி ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றியிருப்பது பரிசோதனைகளில் தெரியவந்தது.
அவர்களது பரிசோதனை மாதிரிகள் தேசிய நோய் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
அவை ஓமிக்ரான் வகைக் கிருமியா இல்லையா என்பதைக் கண்டறிய மரபணுச் சோதனைகள் நடத்தப்படும்.
கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 30) இரவு, இந்தியா செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கடுமையான விதிமுறைகள் நடப்புக்கு வந்த பின்னர் அங்கு மொத்தம் எட்டு பயணிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மும்பை அதிகாரிகள் அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து அந்த நகருக்கு வந்த 76 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கிருமிப் பரிசோதனை செய்யவுள்ளனர்.
இந்த 76 பேரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவான தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.