ஓமிக்ரானால் முதல் உயிரிழப்பு!

1 mins read
9332dd24-c05e-4379-be0a-0a70ea14a6ea
இன்று 13ஆம் தேதி லண்டனில் உள்ள ஒரு கொவிட்-19 தடுப்பூசி மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: பிரிட்டனில் புதுவகை ஓமிக்ரான் கொவிட்-19 தொற்றி, குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்ததாக 'ஸ்கை நியூஸ்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஓமிக்ரான் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதும் அதனால் குறைந்தது ஒருவர் மாண்டுபோனதும் வருத்தம் அளிக்கிறது," என்று மேற்கு லண்டனில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்திற்குச் சென்றிருந்தபோது திரு ஜான்சன் கூறினார். உருமாறிய ஓமிக்ரான் கிருமித்தொற்றால் நிகழ்ந்துள்ள முதல் உயிரிழப்பு இது.

பிரிட்டனில் கொரோனா தொற்று விழிப்புநிலை 3ல் இருந்து 4ற்கு உயர்த்தப்பட்ட சில மணி நேரங்களில் ஓமிக்ரானால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவலைப் பிரதமர் வெளியிட்டார்.

'டெல்டா' கிருமியால் பிரிட்டனில் சமூக அளவிலான கொவிட்-19 பரவல் அதிகமாக உள்ளது என்றும் இந்நிலையில், புதிய ஓமிக்ரான் கிருமிப் பரவல், பொது, சுகாதாரப் பராமரிப்புத் துறையை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் பிரிட்டிஷ் சுகாதார, சமூகப் பராமரிப்புத் துறை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து இருந்தது.

பிரிட்டனில் நேற்று மட்டும் புதிதாக 1,239 பேரை ஓமிக்ரான் கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்