கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்து
புதுவகை ‘ஓமிக்ரான்’ கொவிட்-19 கிருமிப் பரவலை மட்டுப்படுத்தவும் அதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் அதிகமாவதைத் தடுக்கவும் பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டியிருக்கலாம் என்று அந்நாட்டு அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உருமாறிய ‘டெல்டா’ கிருமியைவிட, புதிய உருமாற்றமான ‘ஓமிக்ரான்’ வேகமாகப் பரவி வருவதாக பிரிட்டிஷ் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனால், இன்னும் சில நாள்களுக்குள் பிரிட்டனில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா கிருமிகளின் வரிசையில் ‘ஓமிக்ரான்’ முதலிடத்திற்கு வந்துவிடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 58,194 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவ்வாண்டு ஜனவரிக்குப் பிறகு, ஒருநாளில் பதிவாக ஆக அதிக பாதிப்பு இதுதான்.