சிங்கப்பூர்வாசிகள் இன்றிலிருந்து (டிசம்பர் 16) இத்தாலிக்குச் சுற்றுப்பயணமாகச் செல்ல முடியாது.
அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை இந்தத் தடை நடப்பில் இருக்கும்.
இத்தாலிய சுகாதார அமைச்சு கொவிட்-19 தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரையும் புருணையையும் சேர்த்துள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இத்தாலிய தூதரகம் நேற்று கூறியது.
அதிக அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்தோர், வேலை, மருத்துவம் அல்லது படிப்பு நிமித்தமாக இத்தாலிக்குச் செல்லலாம்.
அல்லது அவசர காரணங்களுக்காகவோ தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்காகவோ அங்கு செல்லலாம்.
சுற்றுப்பயணிகள் செல்வதற்கு அனுமதி இல்லை.
இத்தாலிக்குள் நுழைய அனுமதிக்கப்படுபவர்கள், ஒரு முகவரியைக் குறிப்பிட்டு, அங்கு 10 நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
சிங்கப்பூரிலிருந்து பயணம் செய்வோர், இத்தாலிய விமான நிலையங்களின் வழியாக வேறு இடங்களுக்குப் பயணத்தைத் தொடர முடியும்.
ஆனால் விமான நிலையங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைவிட்டு அவர்கள் வெளியேறக்கூடாது.
சிங்கப்பூரை அதிக தொற்று அபாயம் உள்ள நாடுகளில் சேர்த்ததற்கான காரணத்தை இத்தாலிய தூதரகம் தெரிவிக்கவில்லை.
சிங்கப்பூர் இத்தாலியுடனான தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தை அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கியது.
அங்கிருந்து இங்கு வருவோருக்கான விதிமுறைகளில் தற்போதைக்கு மாற்றங்கள் ஏதும் இல்லை.