சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி 4 முதல் 6ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் இயக்கம் நேற்று சரளமாகத் தொடங்கியது.
சிறார்கள் ஆர்வத்துடன் தங்கள் பெற்றோருடன் தடுப்பூசி நிலையத்துக்குச் சென்று ஃபைசர்/கொமிர்னாட்டி தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்காக நேற்று ஏழு நிலையங்கள் செயல்பட்டன.
முதல் நாளான நேற்று ஏழு நிலையங்களிலும் 3,300 ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சும் இளம் பருவ மேம்பாட்டு முகவையும் நேற்று அறிவித்தன.
வரும் ஜனவரி மாதத்தில் மேலும் எட்டு நிலையங்கள் செயல்படும்.
தொடக்கப்பள்ளி 4 முதல் 6ஆம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்குச் சென்ற புதன்கிழமை ஏறத்தாழ 110,000 குறுஞ்செய்தி தகவல்கள் அனுப்பப்பட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள மாண வர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 40%க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்துகொண்டுள்ளனர்.
திருவாட்டி பவித்ரா கைலாசன், 47, என்ற கணினித்துறை நிர்வாகி, நேற்று அனுஜா கைலாசன், 11, என்ற தன் புதல்வியுடன் சென்ஜா-கேஷியூ சமூக மன்றத்தில் செயல்பட்ட தடுப்பூசி நிலையத்திற்கு வந்திருந்தார்.
"தடுப்பூசி நீளமாக இருக்கும் என்று செல்வி அனுஜாவின் சகோதரி சொன்னதால் அனுஜாவுக்கு பயம் இருந்தது. ஆனால் தடுப்பூசி நிலையத்தில் தாதியர்கள் மிகவும் அன்புடன் அமைதியாக எல் லாவற்றையும் அனுஜாவுக்கு விளக்கினர்.
"இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட நான், காப்பூசிக்காக (பூஸ்டர்) காத்திருக்கிறேன். தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கும். என்னுடைய புதல்வியையும் காப்பாற்ற விரும்பி அவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்து வந்தேன்," என்று திருவாட்டி பவித்ரா கூறினார்.
பயமின்றி, வலியின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் இரண்டாவது ஊசிக்காக காத்திருப்பதாகவும் சவூத் வியூ தொடக்கப்பள்ளியில் பயிலும் செல்வி அனுஜா கூறினார்.
மாணவர்களுக்கான தேசிய தடுப்பூசி இயக்கம் ஐந்து மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள சிறாருக்கும் நீட்டிக்கப்படும்.
கல்வி அமைச்சின் பள்ளிக்கூடங்களில் தொடக்கப்பள்ளி 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மதரசாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 5 முதல் முன்பதிவு தொடங்கும். ஐந்து முதல் 11 வரை வயதுள்ள சிறாருக்கு இப்போது ஃபைசர் -பயோஎன்டெக்/கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
12 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள சிறார், பெற்றோர் அல்லது பொறுப்பாளருடன் நேரடியாகச் சென்று 22 தடுப்பூசி நிலையங்களில் எந்த நிலையத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.