சிங்கப்பூர் ஊழியரணிக்கு வீட்டில் இருந்து வேலைசெய்யும் ஏற்பாடு முக்கியத் தெரிவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும், அத்தகைய ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் மனிதவள அமைச்சு அவசரம் காட்டாது என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்து இருக்கிறார்.
"குறைந்தது கால்வாசி நாள்களுக்குத் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கும் நடைமுறையைத் தொடர்வோம் என்று பெரும்பான்மை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அதன் தொடர்பில் சட்டமியற்ற அவசரப்படக்கூடாது. அப்படிச் செய்வது, பணியிடத்தில் நீக்குப்போக்கற்ற நிலையை உருவாக்கி, பொருளியல் மீட்சிக்கு இடையூறை ஏற்படுத்திவிடலாம்," என்று திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
கடந்த 2020ஆம் ஆண்டில், நிறுவனங்களில் பணியாற்றியோரில் நால்வரில் மூவர், பணியிடத்தைவிட்டு வெளியில் இருந்தபடி வேலை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
சட்டமியற்றுவது சிறந்த தீர்வாக அமையாமல் போகலாம் என்றார் திருவாட்டி கான்.
மாறாக, நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் வழிகாட்டுவதிலும்; நடைமுறைக்கேற்ப, நீடித்து நிலைக்கும் வகையில் வீட்டிலிருந்து வேலை செய்வதையும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளையும் அமல்படுத்துவதற்கான வளங்களை வழங்கி உதவுவதிலும் தமது அமைச்சு கவனம் செலுத்துகிறது என்று அவர் சொன்னார்.
அவற்றில், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான முத்தரப்பு ஆலோசனையும் திட்டநிலைகளும் அடங்கும்.
இப்போது நடப்பிலுள்ள வேலைவாய்ப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் இடம் சார்ந்ததல்ல என்றும் ஊழியர்கள் எந்த இடத்தில் இருந்து வேலைசெய்தாலும் அது பொருந்தும் என்றும் திருவாட்டி கான் தெளிவுபடுத்தினார்.