கொவிட்-19 அவசரநிலையை உலகம் இந்த ஆண்டு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் கேபிரியசுஸ் நேற்று முன்தினம் கூறியுள்ளார்.
இதற்கு, தடுப்பூசியும், சிகிச்சையும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யவும் கிருமி மற்றும் அதன் உருமாறுதல்களைக் கண்காணிக்கவும், கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் நாடுகள் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஏழை நாடுகளில் தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த நாடுகள் அதிகம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கோரி வருகிறது.
இந்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள்தொகையில் குறைந்தது 70 விழுக்காட்டினருக்காவது தடுப்பூசி போட வேண்டும் என்று அது அழைப்பு விடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் 194 உறுப்பு நாடுகளில் பாதி, 2021ன் இறுதிக்குள் 40% மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை எட்டவில்லை. ஆப்பிரிக்காவில் 85% மக்கள் இன்னும் முதல் தடுப்பூசியை பெறவில்லை.
"இந்த இடைவெளியைக் குறைக்கும் வரை, தொற்றுநோயின் அவசரநிலையைக் முடிக்க முடியாது," என்றார் டாக்டர் டெட்ரோஸ்.
"கடந்த வாரம் சராசரியாக ஒவ்வொரு மூன்று விநாடிகளுக்கும் 100 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஒவ்வொரு 12 விநாடிக்கும் ஒருவர் உயிர் இழந்துள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முதன்முதலில் தோன்றியதிலிருந்து இதுவரை 5.5 மில்லியனுக்கும் அதிகமானோரின் உயிரை கொவிட்-19 குடித்துவிட்டது. ஓமிக்ரான் கிருமி, தொற்று எண்ணிக்கை வெகுவாக உயர்த்தியுள்ளது.
கொவிட்-19 உடன் வாழ உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். கடுமையான சுவாச நோய்களுக்கான நிலையான, ஒருங்கிணைந்த உத்திகள் மூலம் அதை சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.
உருமாறிய கொரோனா கிருமிகள் அதிகம் உருவாக உலகளவில் நிலைமைகள சாத்தியமாக உள்ளன. அதிகம் பரவக்கூடிய, மிகவும் ஆபத்தான உருமாறிய கிருமிக்கான சாத்தியம் உண்மையிலேயே நடக்கக்கூடியது.," என்று அவர் எச்சரித்துள்ளார்.