மொரோக்கோவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மாட்டிக்கொண்ட ஐந்து வயது சிறுவனை மீட்க அந்நாட்டு மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். மீட்புப் பணியின் இறுதிக்கட்ட நடவடிக்கையில் அவர்கள் அடியெடுத்து வைத்திருப்பதாக நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணியாளர்கள் அச்சிறுவனைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகையில், அந்தக் கிராம மக்கள் தங்களின் உயிரைக் கையில் பிடித்துகொண்டு காத்திருக்கின்றனர். அந்தக் கிராமம் மட்டுமின்றி, நான்கு நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 32 மீட்டர் ஆழத்தில் சிக்கித் தவிக்கும் சிறுவன் உயிருடன் திரும்ப வேண்டும் என்று மொரோக்கோ நாட்டினர் மனம் உருகி பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளே இருக்கும் சிறுவனுக்கு மட்டுமின்றி, மீட்புப் பணியாளர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, மிகக் குறுகிய ஆழ்துளைக் கிணற்றை அகலப்படுத்துவது சாத்தியமில்லை என்று உறுதி செய்யப்பட்டது.
அதற்குப் பதிலாக, அந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் துளையிடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
"சிறுவனுக்கு மிக அருகில் சென்றுவிட்டோம். கடந்த மூன்று நாள்களாக இரவு பகலெனப் பாராது, ஓய்வின்றி போராடி வருகிறோம். இப்போது எங்கள் அனைவருக்கும் மிகவும் களைப்பாக இருக்கிறது. இருப்பினும், சிறுவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன் மீட்புப் பணியைத் தொடர்கிறோம்," என்று மீட்புப் பணிக் குழுவின் தலைவர்களில் ஒருவரான அப்தேசலாம் மகோடி கூறினார்.
சிறுவனின் குடும்பம் நிலைகுலைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் மகன் உயிருடன் மீட்கப்பட்டு அவனை மீண்டும் தழுவிக்கொள்ள வேண்டும் என அவனது பெற்றோர் வைத்த கண் வாங்காமல் கிணற்றையே பார்த்துக்கொண்டிருப்பதாக மொரோக்கோ ஊடகம் தெரிவித்தது.