இந்த வாரமும் அடுத்த வாரமும் ஆறு பலதுறை மருந்தகங்கள் வார இறுதி நாள்களிலும் இயங்கும். இவை, புக்கிட் பாஞ்சாங், யூனோஸ், காலாங், பைனியர், பொங்கோல். உட்லண்ட்ஸ் பலதுறை மருந்தகங்கள் ஆகியவை ஆகும்.
சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவாலான கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கூடுதல் நேரம் இயங்கும் இந்த ஆறு பலதுறை மருந்தகங்களும் மோசமான சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்போரை மட்டும்தான் கவனிக்கும். காய்ச்சல், இருமல், சளிக்காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இவற்றில் அடங்கும்.
இந்த அறிகுறிகளின்றி இதர பிரச்சினைகள் இருப்போர் பொது மருந்தகங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியது.
'பிஹெச்பிசி' எனும் பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் சிலவற்றின் மருத்துவர்கள் தங்களின் ஊழியர்களைக் கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். சுகாதாரப் பராமரிப்புத் துறை எதிர்நோக்கும் சுமையைக் குறைக்க சில 'பிஹெச்பிசி' மருத்துவர்கள் கூடுதலானோரை வேலைக்கும் எடுக்கின்றனர்.
சிங்கப்பூர் முழுவதும் சில 'பிஹெச்பிசி' மருந்தகங்கள் வார நாள்களில் இரவு 11 மணிவரை இயங்கும். வார இறுதி நாள்களில் அவை பிற்பகல் இரண்டிலிருந்து ஐந்து மணிவரை இயங்கும். ேநற்று நடைமுறைக்கு வந்த இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் 10ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும்.
கூடுதல் நேரம் இயங்கும் 'பிஹெச்பிசி' மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை https://flu.gowhere.gov.sg/ இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மருத்துவ உதவி தேவைப்படுவோரை முதலில் அடிப்படை சிகிச்சை வழங்கும் மருத்துவர்களை நாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்குச் செல்லுமாறு அமைச்சு மக்களிடம் கூறியது.
"உடல்நலம் சரியில்லாதோர் மட்டும் மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக்கொள்கிறோம். கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளான நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்கள், மோசமாக நோய்வாய்ப்படாதவர்கள் ஆகியோர் இரண்டாம் பிரிவு வழிமுறைகளின்படி வீட்டில் இருந்தபடி தங்களை கவனித்துக்கொள்ளலாம்," என்று அமைச்சு குறிப்பிட்டது.
இரண்டாம் பிரிவு வழிமுறைகளின்கீழ் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் முதலில் 72 மணிநேரத்திற்கு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அதற்குப் பிறகு அவர்கள் 'ஏஆர்டி' பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். பரிசோதனையில் குணமடைந்தது உறுதியான பிறகு நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
"அதிகம் தேவைப்படுவோருக்கு நமது மருத்துவ வளங்கள் பயன்படுவதை உறுதிசெய்ய அனைவரின் தொடர் முயற்சியும் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவை," என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.