கொவிட்-19 கிருமியுடன் போராடுவதில் முக்கிய திருப்புமுனையை எட்டியிருப்பதால் சிங்கப்பூர் அதன் கட்டுப்பாடுகளைக் கணிச
மாகத் தளர்த்தும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
மாற்றங்கள் அறிவிக்கப்பட்டாலும் சிங்கப்பூர் கவனத்துடனான அணுகுமுறையைப் பின்பற்றும் என்றார். கட்டுப்பாடுகளை அதிகமாக அல்லது முழுமையாகத் தளர்த்தி சுதந்திர அணுகுமுறையைக் கடைப்பிடித்த நாடுகள் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பையும் இறப்புகள் கூடியதையும் கண்டிருப்பதாக அவர் நினைவூட்டினார்.
"கொள்ளைநோய் ஒழிந்துவிட்டதாக அவர்கள் அறிவித்தனர். எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் ஒரேயடியாக நீக்கினார்கள். ஆனால், அதன் பிறகு தொற்றுச் சம்பவங்களும் மரண எண்ணிக்கையும் வேகமாக அதிகரிப்பதை அவர்கள் கவலை யுடன் கண்டுவருகிறார்கள்.
"ஆனால், நாம் கவனத்துடன் படிப்படியாக அடியெடுத்து வைக்கும் அணுகு
முறையைப் பின்பற்றினோம். ஈராண்டுகளாக அவை நமக்கு நல்ல பலனைத் தந்துள்ளன.
"அதிகமான ஒன்றுகூடல்களால் நாமும் இன்னொரு கிருமிப் பரவல் அலையைச் சந்திக்கக்கூடும். ஓமிக்ரான்தான் நாம் எதிர்கொண்ட கடைசி கிருமி வகை என்று எண்ணிவிடக் கூடாது.
"புதிய வகைக் கிருமி படிப்படியாக அபாயம் குறைந்ததாகவும் சளிக்காய்ச்சலை ஏற்படுத்துவது போன்றதாகவும் இனி இருந்தாலும், டெல்டாவைப் போல கடுமையானதாகவும் ஆபத்தானதாகவும் அது மாறு
வதற்கான சாத்தியம் உள்ளது.
"அதுபோன்ற நிலை ஏற்பட்டால் சிங்கப்பூர் மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கக்கூடும். அதற்கான அவசியம் ஏற்
படாது என்று நாம் நம்பினாலும் எதுவும் நிகழலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இருப்பினும், என்ன நிகழ்ந்தாலும் ஒவ்வொருவரையும் எப்படிப் பாதுகாப்பது என்பதை நாம் இப்போது தெரிந்துவைத்துள்ளோம்.
"அந்த வகையில், இன்னொரு பூஸ்டர் தேவைப்படலாம். அல்லது மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியாக அது இருக்கலாம்.
"கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ளது. இருப்பினும் இறுதிக்கட்டத்தை நாடு எட்டவில்லை," என்றார் திரு லீ.