சித்திரைப் புத்தாண்டையும் சீக்கியப் புத்தாண்டான வைசாக்கியையும் இன்று கொண்டாடும் ஜெய்பால்-வீணா தம்பதியர் தங்களது தலைப் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்கின்றனர். சீக்கியரான விளையாட்டுத்துறை நிர்வாகி 28 வயது ஜெய்பால் சிங் சித்துவும் அவரின் மனைவியான 30 வயது ஸ்ரீவீணா சரவணனும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டபோது கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக எல்லாரையும் அழைத்து விருந்தளித்து மகிழ முடியவில்லை.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழ், சீக்கிய விருந்தோடு இன்றைய புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர் இத்தம்பதியர்.
வாம்போ டிரைவில் இவர்கள் வாங்கியுள்ள புதுவீட்டில் முதல் கொண்டாட்டமாக புத்தாண்டு அமைவதில் இவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.
ஆறு, ஏழு காய்கறிகள் சேர்த்து சமைக்கும் "சாக்', 'தாயாரின் பருப்பு' என பொருள்படும் 'மாதி தால்' உள்ளிட்ட பஞ்சாபி வகை உணவு வகைகளுடன் தமிழரின் கீரை வகை, பாயாசத்துடன் அம்மா சரஸ், 57, மாமியார் மன்ஜித் கோர், 56, இருவரும் விருந்து தயாரிப்பதாகக் குறிப்பிட்டார் ஸ்ரீவீணா.
சீக்கியர்களுக்குப் புத்தாண்டு அன்று சைவ உணவு உண்பது கட்டாயமல்ல. சித்திரைப் புத்தாண்டில் பல தமிழ்க் குடும்பங்கள் சைவ விருந்து படைப்பார்கள் என்பதால் அவர்கள் வீட்டில் இன்று சைவ விருந்து.
சித்திரைப் புத்தாண்டன்று தமிழர்கள் கோயிலுக்குச் செல்வது போல் சீக்கியர்களும் தங்களது ஆலயத்திற்குச் சென்ற பிறகு வீட்டில் குடும்பத்தினருடன் விருந்துண்டு புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்ற தம்பதியர், இன்று கோயிலுக்கும் சீக்கிய ஆலயத்துக்கும் சென்று வழிபாடு செய்தனர். பின்னர் பெற்றோரின் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். பிறகு தங்களின் புத்தாண்டைத் தொடங்கினர். சித்திரை மாதம் முதல் நாளைச் சித்திரைப் புத்தாண்டாகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.
1699ஆம் ஆண்டு சீக்கிய சமூகமான கல்சா நிறுவப்பட்ட நாளை 'வைசாக்கி' புத்தாண்டாக அந்த சமூகம் கொண்டாடுகிறது. வழக்கமாக வைசாக்கி ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி கொண்டாடப்படும்.
சீக்கிய குருமார்களையும் இந்து தெய்வங்களையும் தங்கள் வீட்டில் வழிபடுவதாகக் கூறிய திரு ஜெய்பால், இந்தப் புரிந்துணர்வு தங்களது குடும்பத்தினரிடையேயும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். தொடக்கத்தில் இந்து சமய வழக்கங்கள் ஜெய்பாலின் அக்காவான மீலன்ஜித் கோரை ஆச்சரியப்படுத்தின. தமது சந்தேகங்களை ஸ்ரீவீணாவிடம் கேட்டுத் தெளிவு பெறுவார்.
"நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பேண பண்டிகைகளைக் கொண்டாடுவது முக்கியம். கொண்டாட்டங்களும் சடங்குகளும் தனித்தன்மையான வழமைகளைப் பேணிக்காக்க உதவுகின்றன," என்ற ஸ்ரீவீணா, தங்களது பிள்ளைகளுக்கு இரண்டு பாரம்பரியங்களையும் சொல்லிக் வளர்க்கப்போவதாகக் கூறினார்.
"இந்து ஆலயங்களுக்கும் என் பிள்ளைகளை அழைத்துச் செல்வேன். பிற சமயங்களும் மதிக்கத்தக்கவை என்பதை என் பிள்ளைகளுக்கு உணர்த்துவேன்," என்றார் திரு ஜெய்பால் சிங்.
இவ்வாண்டின் டிசம்பரிலும் அடுத்தாண்டு ஜனவரியிலும் முறையே தங்களது இந்து, சீக்கியத் திருமணங்களை இத்தம்பதியினர் நடத்தவிருக்கின்றனர். சடங்குபூர்வ திருமணத்திற்கு முடிந்தவரை உற்றார் உறவினரை அழைத்து எங்களது அன்பைப் பகிர விரும்புகிறோம்," என்றார் திரு ஜெய்பால்.