சிங்கப்பூரில் பல துறைகளையும் சேர்ந்த வேலையிடங்களில் மரண விபத்துகள் கூடி இருக்கின்றன. வேலையைக் குறிப்பிட்ட நேரம் நிறுத்திவிட்டு பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் நடைமுறையை இன்று முதல் அமல்படுத்தும்படி நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன.
வேலை நிறுத்தப்படும் நேரத்தில் நிறுவனங்கள் பாதுகாப்பு நிர்வாக முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்தகால விபத்துகளில் இருந்து பாடம் கற்கவேண்டும் என்று மனிதவள அமைச்சும், வேலை இடப் பாதுகாப்பு சுகாதார மன்றம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகிய அமைப்புகளும் தொழில்துறைப் பங்காளிகளும் கூட்டறிக்கையில் வலியுறுத்தின.
சென்ற மாதம் வேலையிடங்களில் 10 உயிர்பலி விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றையும் சேர்த்து இந்த ஆண்டில் வேலையிடங்களில் 20 பேர் மாண்டுவிட்டனர்.
2016க்குப் பிறகு இதே காலகட்டத்தில் இந்த அளவுக்கு எந்த ஓர் ஆண்டிலும் வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையைக் குறிப்பிட்ட நேரம் நிறுத்திவிட்டு வேலையிடங்களில் ஊழியர்களையும் தொழிற்சங்கங்களையும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகளில் ஈடுபடுத்த மூத்த நிர்வாகத்தினர் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
கண்டுபிடிக்கக்கூடிய குறைபாடுகளுக்கு அல்லது பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வுகாண முயல்வார்கள்.
இடர்களை மதிப்பிடும் நடைமுறைகளையும் நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஊழியர்கள் தாங்கள் பார்க்கும் வேலைக்கு ஏற்ற வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பயிற்சிகளைப் பெற்று இருக்கிறார்கள் என்பதையும் ஆபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் அவர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பதையும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
அண்மைய உயிர்பலி விபத்துகளில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் விளக்க வேண்டும். அத்தகைய விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க எப்படி நடந்துகொள்ளலாம் என்பதை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் போதிக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்துக்கு வேலையை நிறுத்திவிட்டு பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் நடைமுறை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நடைமுறை, உயரமான இடங்களில் பாதுகாப்பாக ஊழியர்கள் வேலை பார்ப்பது, பாரந்தூக்கி போன்ற சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது ஆகிய இரண்டு அம்சங்களில் ஒருமித்த கவனம் செலுத்தும்.
அந்த நடைமுறையில் ஏழு தொழில்துறைச் சங்கங்கள் பங்கெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த முறை அமல்படுத்தப்பட்ட பிறகு அதிலிருந்து தெரியவந்தவை குறித்து ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றும் மேம்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.