இலங்கையின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நேற்று தனது புதிய அமைச்சரவையை அமைத்தார்.
ஆனால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தில் சேரப் போவதில்லை என்று அறிவித்துவிட்டன. அதே நேரத்தில் பிரதமரின் பொருளியல் மீட்சித் திட்டத்திற்குத் தாங்கள் ஆதரவு தரப் போவதாகவும் அவை தெரிவித்தன.
இருந்தாலும் தனது அமைச்சரவையில் நான்கு அமைச்சர்களை நேற்று ரணில் நியமித்ததாக ஊடகத் தகவல்கள் கூறின.
புதிய பிரதமருக்கு முக்கியமான இரண்டு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன. முக்கிய எதிர்க்கட்சியான எஸ்ஜேபி கட்சி உடனடியாக அதிபர் பதவி விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையைக் கைவிட்டதாகத் தெரியவந்தது.
பொருளியல் நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பது இப்போதைக்கு மிக முக்கியம் என்று அந்தக் கட்சி ஓர் அறிக்கையில் தெரிவித்தது. அதேபோல, இலங்கை சுதந்திரா கட்சி அமைச்சரவையில் தான் சேரப்போவதாக அறிவித்தது.
ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர். பதவி ஏற்றுக்கொண்ட நான்கு அமைச்சர்களும் அதிபரின் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
என்றாலும் நிதி அமைச்சராக நேற்று யாரும் பொறுப்பேற்கவில்லை. இலங்கையின் பொருளியல் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியாக அந்த நாடு அனைத்துலக பண நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் விசாக தினத்தையொட்டி அகற்றப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்று இரவு 8மணி முதல் மீண்டும் நடப்புக்கு வரும் என்றும் அது இன்று அதிகாலை 5 மணி வரை நடப்பில் இருக்கும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது.
இலங்கை வரவாறு காணாத பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராடி வந்தனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து வன்செயல் வெடித்தது.
கடைசியில் பிரதமர் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிவிட்டார். ரணில் பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.
என்றாலும் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்யவேண்டும் என்றும் கேட்டு மக்கள் குரல் கொடுத்துவருகிறார்கள்.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் ராஜபக்சே அலுவலகத்துக்கு வெளியே நேற்றும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்செயல்கள் தொடர்பில் காவல்துறை ஏற்கெனவே ஏறக்குறைய 300 பேரைக் கைதுசெய்துள்ளது.
இவ்வேளையில், இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 21வது திருத்தம் பற்றி நேற்று தலைமைச் சட்ட அலுவலக அதிகாரியுடன் விவாதிக்கப்பட இருந்ததாக ரணில் முன்னதாக தெரிவித்து இருந்தார். அந்தத் திருத்தம் அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கிறது.
தலைமைச் சட்ட அதிகாரியுடன் விவாதித்ததற்குப் பிறகு அங்கீகாரத்திற்காக அமைச்சரவையிடம் அது தாக்கல் செய்யப்படும் என்றும் ரணில் தெரிவித்தார்.