சப்பாத்தி கேட்டதால் எழுந்த தகராற்றில் லாரியை ஏற்றி இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்பில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை புறநகர்ப் பகுதியான வடபெரும்பாக்கம் நெடுஞ்சாலைப் பகுதியில் வாகனங்களை வாடகைக்கு நிறுத்துமிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 36, குமரன், 34, நவீன், 36 ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் அந்த வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றனர்.
பின்னர் அவர்கள் மூவரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வடமாநில லாரி ஒன்றின் பின்னால் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்பட்டது.
அந்த லாரியின் ஓட்டுநரான கன்னையா லால் சிங் என்பவரும் உதவியாளரான கிரீஷ் குமார் என்பவரும் அருகில் சப்பாத்தி சமைத்து, சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
மது அருந்திய மூவரும் அவர்களிடம் சென்று சப்பாத்தி கேட்டனர். தங்களிடம் வேறு உணவு இல்லை என்று கன்னையாவும் கிரீஷும் கூறியதால், நண்பர்கள் மூவரும் சேர்ந்து அவர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
அதன்பின்னர் அம்மூவரும் மீண்டும் அந்த லாரியின் பின்புறம் அமர்ந்து மது அருந்தினர்.
தங்களைத் தாக்கியதால் ஆத்திரமடைந்த கன்னையா, லாரியில் ஏறி, அதை வேகமாகப்பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், லாரியின் பின்சக்கரம் ஏறியதில், பின்னால் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த நண்பர்கள் மூவரும் படுகாயமுற்றனர்.
இதில் கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே குமரனும் உயிரிழந்தார். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நவீனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நண்பர்கள் மூவர்மீதும் லாரியை ஏற்றியபின், அதனைச் சிறிது தூரம் ஓட்டிச் சென்று நிறுத்திவிட்டு ஓட்டுநர் கன்னையாவும் உதவியாளர் கிரீஷும் தப்பியோடினர்.
தகவலறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அங்கிருந்த சில வடமாநிலப் பதிவெண் கொண்ட லாரிகளின் கண்ணாடிகளை அவர்கள் அடித்து நொறுக்கியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அவ்விடத்திலிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
பின்னர் தப்பியோடிய கன்னையாவையும் கிரீஷையும் கைதுசெய்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த கமலக்கண்ணனும் குமரனும் பள்ளிக்காலம் முதல் நண்பர்களாய் இருந்து, ஒன்றாய்த் தொழில் செய்து வந்தனர்.
தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.