ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட கோழிகளும் பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து உறைந்த கோழிகளும் அடுத்த சில வாரங்களில் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உணவு விநியோகிப்பு நிறுவனம் ஒன்று தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யும் கோழிகளின் எண்ணிக்கையை பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
கோழி இறைச்சி ஏற்றுமதிக்கு மலேசியா தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை கடந்த புதன்கிழமை தொடங்கியது. சிங்கப்பூருக்கு கோழிகள் அனுப்பப்
படுவதை மலேசியா நிறுத்தியுள்ளபோதிலும் சிங்கப்பூரில் கோழி
விநியோகம் சீராக இருப்பதாக திரு டான் கூறினார்.
சிங்கப்பூர் இறக்குமதி செய்யும் கோழிகளில் மூன்றில் ஒரு பங்கு மலேசியாவிலிருந்து வருகிறது. மலேசியாவிலிருந்து பெரும்பாலான கோழிகள் சிங்கப்பூருக்கு
உயிருடன் கொண்டுவரப்பட்டு இங்கு அறுக்கப்பட்டுக் குளிரூட்டப்படுவது வழக்கம்.
"வழக்கம்போல் வாங்கும் அளவையே வாங்கினால் அனைவருக்கும் போதுமான கோழி கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறோம்," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு டான் பதிவிட்டார்.
நேற்று காலை சில பேரங்
காடிகளுக்குச் சென்றிருந்தாகவும் அங்கு போதுமான அளவில் கோழிகள் இருந்ததாகவும் திரு டான் கூறினார்.
உணவுப்பொருள்கள் இடையூறு களால் சிங்கப்பூர் அவ்வப்போது பாதிப்படையும் என்றும் அவர் தெரிவித்தார்.
"இந்த இடையூறுகளுக்கு நம்மால் முழுமையாகத் தீர்வு காண முடியாவிட்டாலும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அவற்றைக் கடந்து செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் திரு டான்.
சிங்கப்பூர் உணவு அமைப்புடன்
கோழிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், விநியோகிப்
பாளர்கள், பேரங்காடிகள் இணைந்து செயல்பட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சிங்கப்பூரில் கோழிகளின் விநியோகம் போதுமான அளவில் உள்ளதாக அவர் பாராட்டினார்.
இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களில் சிங்கப்பூரில் கோழி
களின் விலை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் குளிரூட்டப்பட்ட முழுக் கோழியின் சராசரி விலை கிலோவுக்கு $7.21. கடந்த மார்ச் மாதத்தில் அதன் விலை $6.60ஆக இருந்தது.
குளிரூட்டப்பட்ட கோழி இறக்கைகளின் விலை கடந்த மார்ச் மாதம் கிலோவுக்கு $8.75. இது கடந்த ஏப்ரல் மாதம் $9.45ஆக அதிகரித்தது.
தடை குறித்து மலேசியா அறிவித்ததும் கோழிகளின் விலை $0.50 அதிகரித்ததாகவும் சில நாள்களுக்கு முன்பு அது மேலும் $0.30 ஏற்றம் கண்டதாகவும் உணவு, பானத் துறை நிறுவனம் ஒன்றின் இயக்குநர் தெரிவித்தார்.