தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டதாலும் மக்களின் உடலில் உருவான தடுப்பாற்றல் குறையும்போது சிங்கப்பூரில் அடுத்த கொவிட்-19 அலை உருவாகலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
அதனால் சிங்கப்பூரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் உயரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, ஐரோப்பாவில் காண்பது போல இங்கும் பிஏ.4, பிஏ.5 கிருமித்திரிபுகள் அதிகம் பரவலாம் எனும் திரு ஓங் சொன்னார்.
ஓர் கிருமிப் பரவல் அலை வந்தபோன நான்கிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு அடுத்த அலை ஏற்படும் என எதிர்பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த விளையாட்டு, சமூக முனையத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) அன்று சென்றுபார்த்தபோது திரு ஓங் அவ்வாறு தெரிவித்தார்.
பிஏ.4, பிஏ.5 கிருமித்திரிபுகள் இவ்வாண்டு தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவில் முதன்முதலில் கண்டு அறியப்பட்டன. தற்போது அந்த வகைக் கிருமிகளால்தான் பல நாடுகளில் அதிகமாகப் பரவி வருகின்றன.
சிங்கப்பூரில் முதன்முதலில் அந்தக் கிருமித்திரிபுகள் மூன்று பேருக்கு தொற்றி இருப்பதாக மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் இதனால் அச்சப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த பிஏ4, பிஏ5 கிருமித்திருபுகளைவிட தற்போது பிஏ1, பிஏ2 கிருமிகள்தான் இங்கு அதிகம் காணப்படுகின்றன என்று திரு ஓங் கூறினார்.
"நமக்கு உள்ள வலுவான மீள்திறனைக் கொண்டு, பிஏ4, பிஏ5 கிருமித்திருபுகளின் பரவலை எதிர்கொள்ளலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.