முரசொலி
கொவிட்-19 தொற்று ஓரளவுக்கு ஒடுங்கியதை அடுத்து உலகின் பல பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக, நிதானமான அவசரத்துடன் பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றன. கொவிட்-19 உலகைவிட்டு இன்னமும் ஒழியவில்லை என்றாலும்கூட அந்தக் கிருமி முன்பைவிட இப்போது வீரியம் குறைந்து இருப்பதாகவே தெரிகிறது.
இருந்தாலும்கூட உலகம் முழுவதும் ஒரே மாதிரியான நிலை இன்னமும் இல்லை. ஓரிடத்தில் தொற்று அதிகமாகவும் ஓர் இடத்தில் குறைவாகவும் காணப்படுகிறது. பல நாடுகளும் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருக்கின்றன, தளர்த்தி வருகின்றன.
இரண்டாண்டு காலமாக பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி கிடந்த உலக மக்கள் வெளியே கிளம்பி உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
சிங்கப்பூரர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உலகப் பயணிகள் இங்கு அதிகமாக வந்துசெல்ல தொடங்கிவிட்டனர்.
வீட்டில் இருந்தபடியே வேலையும் பார்த்து வந்த ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்புகிறார்கள். பள்ளிப் பிள்ளைகள் மீண்டும் புத்தக மூட்டையைச் சுமக்க தொடங்குகிறார்கள். பல துறைகளும் மெல்ல மெல்ல தலை நிமிர்கின்றன. பொருளியல் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
தொற்று காலத்தில் உயிரையும் பணயம் வைத்து ஓய்வு இல்லாமல் 24 மணிநேரமும் வாரம் ஏழு நாள்களும் பாடுபட்டுவந்த முன்களப் பணியாளர்கள் இப்போது கொஞ்சும் பெருமூச்சு விடுகிறார்கள்.
இத்தகைய ஒரு நேரத்தில்தான் மறுபடியும் பயத்தைக் கிளப்பும் வகையில் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வரும் மாதங்களில்- அதாவது ஜூலை, ஆகஸ்டில் கொவிட்-19 தொற்று அலை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் அபாயச் சங்கு ஊதி இருக்கிறார்கள்.
பள்ளிக்கூட விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு இந்த மாதம் சிங்கப்பூரர்கள் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு உண்டு. அவர்கள் கிருமி தொற்றுடன் திரும்பக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஒரு நாடு எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருந்தாலும் அதை எல்லாம் மீறி கொரோனா வேலையைக் காட்டும் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் நாம் கண்டுகொண்டு இருக்கிறோம். இப்போதுசீனா படும்பாடு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
கொவிட்-19 கிருமி திடீர் திடீர் என்று உருமாறக்கூடியது. அதை ஒடுக்க இப்போதுள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். ஆனாலும் அதற்கு எதிரான தடுப்பூசி ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் நோய்த் தடுப்பு ஆற்றலை ஏற்படுத்தித் தருகிறது.
அல்லது தடுப்பூசி மருந்து செயல்பட முடியாத அளவுக்குக் கிருமி புதிய வடிவில் உருமாற வாய்ப்பு உண்டு. அடுத்த தொற்று அலை ஏற்படும் பட்சத்தில் அதற்கு இதுவும் ஒரு காரணமாகலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். சிங்கப்பூரில் புதிய அலைக்குப் பதிலாக இலேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பலர் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடிய சூழலும் வரலாம்.
எப்படிப்பட்ட சூழ்நிலை தலைதூக்கினாலும் ஓமிக்ரான் தொற்று தலைவிரித்து ஆடியபோது நாம் அனுபவித்த நெருக்கடி மறுபடியும் ஏற்பட ஒருபோதும் நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதுதான் மிக முக்கியமான ஒன்று.
ஓமிக்ரான் தாண்டவ காலத்தில் தாதிமை விடுதிகள், சமூக மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தன.
அவற்றால் இயலாமல் போனதை அடுத்து பலரையும் பொது மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொது மருத்துவமனைகளின் ஒருமித்த கவனம் ஓமிக்ரான் நோயாளிகள் மீது திரும்பியதால் அந்த மருத்துவமனைகள் தங்களுடைய வழக்கமான நோயாளிகளைக் கவனிக்க இயலவில்லை. இது வேறு சுகாதாரப் பிரச்சினைக்கு இடம் கொடுத்துவிட்டது.
சிங்கப்பூரில் வரும் மாதங்களில் கொவிட்-19 தொற்று எப்படி எந்த அளவுக்கு இருந்தாலும் இத்தகைய ஒரு நிலை மீண்டும் ஏற்பட நாம் அனுமதித்துவிடக்கூடாது.
இதைச் சாதிக்க வேண்டுமானால் சுகாதார பராமரிப்பு நிலையங்கள்-அதாவது தாதிமை விடுதிகள் முதல் சமூக மருத்துவமனைகள் வரை-ஒவ்வொன்றும் தொற்றைச் சமாளிக்க எப்போதுமே ஆயத்த நிலையில் இருக்கவேண்டும் என்பது கட்டாயமானது. சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோரும் அனைத்து வசதிகளும் முழு விழிப்பு நிலையில் இருந்துவரவேண்டும்.
பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள நாடு. அடுத்தஅலை எந்த வடிவில் எப்படி வந்தாலும் தொற்றைச் சமாளிக்க சிங்கப்பூர் முன்பைவிட இப்போது வெகு சிறப்பான நிலையில் இருக்கிறது.
ஆகையால் மக்கள் அளவுக்கு அதிகமாக கவலைப்பட தேவையில்லை. அவர்கள் தங்கள் பயணத் திட்டங்களைக் கைவிட வேண்டிய அவசியமும் இல்லை.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்திருப்பதால் கொவிட்-19க்கு முன்பு இருந்த பொருளியல், சமூக இயல்புநிலை திரும்புகிறது. இதை சிங்கப்பூரர்கள் அனுபவிக்கத்தான் வேண்டும். அதே வேளையில் தங்களுக்கும் சில பொறுப்புகளும் கடமைகளும் உண்டு என்பதை அவர்கள் மறக்கலாகாது.
சிங்கப்பூரர்கள் உலக நிலவரங்களையும் உள்ளூர் சுகாதாரச் சூழல்களையும் பற்றி, அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரிந்துகொண்டு எப்போதுமே விழிப்புடன் இருந்துவர வேண்டும்.
வரும் மாதங்களில் தொற்று அதிகமாகி அதனால் வாழ்க்கை பாணியை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை வந்தால், அதற்கும் சிங்கப்பூரர்கள் மனதள விலும் செயல் அளவிலும் தயாராக இருக்க வேண் டும். இதை எப்போதுமே அவர்கள் மனதில் நிலை நிறுத்தி வைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தங்களையும் தங்கள் சிங்கப்பூரையும் மனதில் நிறுத்தி முன்னெச்சரிக்கையுடன் கெட்டிக் காரத்தனமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஓமிக்ரான் தொற்று மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்காமல் பொறுப்புடன் நடந்துகொண்டு நாமும் நம் அடிப்படை அமைப்புகளும் ஆயத்த நிலையில் விழிப்பு நிலையில் தொடர்ந்து இருந்து வந்தால் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இருந்து மீண்டு வந்தாலும் அது மீண்டும் வந்தாலும் அதை வெற்றிகரமான முறையில் வீழ்த்தி சிங்கப் பூரர்கள் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்ல முடியும் என்பது திண்ணம்.