'சிங்கப்பூரில் அடுத்த கொவிட்-19 அலை ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ஏற்படக்கூடும்'
சிங்கப்பூரில் அடுத்த கொவிட்-19 அலை ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ஏற்படக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். தாதிமை இல்லங்கள் முதல் சமூக மருத்துவமனைகள் வரை ஒவ்வொரு சுகாதாரப் பராமரிப்பு நிலையமும் இதற்குத் தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஓமிக்ரான் அலையின்போது கொவிட்-19 நோயாளிகள் பலர் பொது மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏனெனில், அவர்களுக்கு சிகிச்சை அளித்த தாதிமை இல்லங்கள், சமூக மற்றும் மருத்துவமனைகளால் அவர்களைச் சரியாகக் கவனிக்க இயலாமல் போனது. அதே நிலை சிங்கப்பூருக்கு மீண்டும் ஏற்படக் கட்டுப்படியாகாது என்றார் அமைச்சர் ஓங்.
சுகாதார அமைச்சின் வருடாந்திர பணித்திட்டக் கருத்தரங்கில் கலந்துகொண்டு நேற்று பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
"ஒவ்வொரு சுகாதாரப் பராமரிப்பு நிலையமும் கொவிட்-19க்கு தயாராக இருக்க வேண்டும். நோயாளிகளைத் தங்கள் இடத்திலேயே பராமரிக்க அவற்றால் முடிய வேண்டும். ஏனெனில், தடுப்பூசி மூலம் பலரும் பெரிய பாதிப்பின்றி குணமடைந்துவிடுவர்," என்றார்.
தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட பிஏ.4, பிஏ.5 ஓமிக்ரான் துணைத் திரிபுகளால் ஏற்படக்கூடிய கொவிட்-19 அலைக்கு சிங்கப்பூர் தயாராகி வருகிறது.
இதில் நல்ல செய்தி என்னஎன்றால், துணைத் திரிபுகளால் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு, முதன்முறையாக எழுந்த ஓமிக்ரான் அலையைவிடக் குறைவு. மேலும், துணைத் திரிபுகளால் தென்னாப்பிரிக்காவில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கையோ மரண விகிதமோ அதிகரிக்கவில்லை.
பல்வேறு கொவிட்-19 அலைகளைக் கடந்து வந்துள்ள சிங்கப்பூர் நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றார் அமைச்சர் ஓங். குறிப்பாக, இங்கு தடுப்பூசி விகிதம் அதிகமாக இருப்பதோடு முகக்கவசம் அணியும் விதிகளும் தொடர்ந்து நடப்பில் உள்ளன.
என்றாலும்கூட, கொவிட்-19க்கு எதிராக சிங்கப்பூர் அதன் தற்காப்பை வலுப்படுத்த வேண்டும். சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் அனைத்தும் கொவிட்-19 நோயாளிகளைக் கையாள முடிவதை உறுதிசெய்வதுடன், கூடுதலான மருத்துவமனை படுக்கைகளை அமைக்க வேண்டும்.
இது, மூன்று வழிகளில் செய்யப்படுவதாக திரு ஓங் விவரித்தார். முதலாவதாக, மருத்துவமனைகள் இல்லப் பராமரிப்புச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளன. தங்கள் சொந்த வீட்டில் இருந்தவாறே தங்களைப் பராமரித்துக்கொள்ள இந்த ஏற்பாடு வகைசெய்கிறது.
இரண்டாவதாக, நீண்டகால மருத்துவமனை நோயாளிகள் பலரும் தாதிமை இல்லங்களில் இடத்துக்காக காத்திருக்கின்றனர். அங்கு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், அத்தகைய நோயாளிகள் அங்கு மாற்றப்படலாம்.
கடைசியாக, சமூக சிகிச்சை நிலையங்கள் செயல்படும் முறை மாற்றப்பட வேண்டும் என்றார் அமைச்சர் ஓங். அணுக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய, அதே வேளையில் சீரான மருத்துவ நிலையுடன் உள்ள வயது முதிர்ந்த கொவிட்-19 நோயாளிகளை ஏற்றுக்கொள்ள இத்தகைய நிலையங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டன.
இனி, மருத்துவமனையில் வழங்கப்படும் தீவிர பராமரிப்பு தேவைப்படாத எந்தவொரு நோயாளியையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த நிலையங்கள் மறுவடிவமைக்கப்பட வேண்டும் என்று திரு ஓங் சொன்னார்.
மேலும், தடுப்பூசிக்குத் தகுதிபெறும் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர், கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள சிங்கப்பூர் அதன் முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரிவினரிடையே ஏறக்குறைய 12 விழுக்காட்டினர் இன்னும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை.
அந்திமகாலப் பராமரிப்புக்குக் கூடுதல் ஆதரவு
இதற்கிடையே, பெரும்பாலானோர் தங்களுக்கு நன்கறிந்த சூழலில் இறக்க விரும்பினாலும், 61 விழுக்காட்டினர் மருத்துவமனை படுக்கையில்தான் கடைசி நாள்களைச் செலவிடுகின்றனர்.
எனினும், அந்திமகாலப் பராமரிப்புக்கு அளிக்கப்படும் ஆதரவை மேம்படுத்துவதன் மூலம், ஐந்து ஆண்டுகளில் இந்த விகிதத்தைக் குறைக்க சிங்கப்பூர் விரும்புவதாக திரு ஓங் சொன்னார்.