உலகளவில் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஈராண்டுக்குப் பிறகு பயணம் மேற்கொள்ளும் சிலர் எந்தக் காரணத்துக்காகவும் திட்டங்களை ஒத்திவைக்கப்போவதில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
மக்கள் கொவிட்-19 கிருமிப் பரவலை சகித்துக்கொண்டு வாழ்வதை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில பயணத் துறை நிறுவனங்களும் தெரிவித்தன.
தற்போது கொவிட்-19 கிருமியைக் கண்டு அவர்களுக்கு பயம் இல்லை என்றும் நிறுவனங்கள் குறிப்பிட்டன.
உலகளவில் பயணக் கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அதிகமானோர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதனால் பல விமான நிலையங்களில் பயணிகளின் பெட்டிகள் தொலைந்துபோவது போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக மனிதவளப் பற்றாக்குறையால் இத்தகைய பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிங்கப்பூரர்கள் பயணக் காப்புறுதித் திட்டங்களை வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.