கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருந்தாலும் சவால்கள் தொடர்ந்து இருக்கும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
பெரும்பாலான கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையும் கொவிட்-19 கிருமிப் பரவலை சகித்துக்கொண்டு வாழ்வதற்கு சிங்கப்பூர் பழகிக்கொண்டு வருவதையும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பான தமது தேசிய தின உரையில் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் மீண்டும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர், மக்களால் பண்டிகை நாள்களை தங்களின் குடும்பத்தாருடன் மீண்டும் ஒன்றுசேர்ந்து கொண்டாடமுடிகிறது என்றும் அவர் கூறினார்.
எனினும், பிரச்சினைகள் முழுமையாக ஓயவில்லை என்பதையும் திருவாட்டி ஹலிமா சுட்டினார்.
பொருளியல், ஒன்றுபட்ட சமூகம் ஆகியவற்றில் சிங்கப்பூர் நெருக்குதல்களை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார்.
மேலும், மூப்படையும் சமூகம், பருவநிலை மாற்றம் போன்ற நீண்டகாலத்துக்கான விவகாரங்களிலும் சவால்கள் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
"பொருளியல் வளர்ச்சி மந்தமடையும்போது அரசாங்கங்களின் வரவுசெலவுத் திட்டங்களில் பெரும் நெருக்குதல் ஏற்படும்," என்று அதிபர் ஹலிமா கூறினார்.
"சமத்துவமின்மை மோசமடைந்தால் சமூகத்தில் பிரிவுகள் ஏற்படக்கூடும். அதனால் அனைவரும் தங்களின் திறன்களையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளமுடிவதை நாம் உறுதிப்படுத்தவேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.