ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றத்தையும் கவனத்தில் காண்டு சிங்கப்பூரின் கல்விமுறையில் மாபெரும் மாற்றங்கள் கொண்டு
வரப்பட்டு உள்ளதாகவும் சமூகமும் குடும்பங்களும் அதற்கு பக்கபலமாக இருந்து வெற்றிகாண வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.
தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் நடைபெற்ற தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் புதிய சமூக ஒற்றுமை குறித்த தமது கருத்தை விவரித்தார்.
'முன்னேறு சிங்கப்பூர்' நடவடிக்கையின்கீழ் இடமபெறும் முக்கிய அம்சங்கள் குறித்து கல்வி அமைச்சு அடுத்து வரும் சில வாரங்களில் வெளியிடும் என்றார் அவர்.
கொள்ளைநோய்க்குப் பிந்திய எதிர்காலத்தை நோக்கி நாடு நடைபோடுவதால் சிங்கப்பூரர்களுக்கு இடையிலான புதிய சமூக ஒற்றுமை அவசியம் என்றார் அவர்.
மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கும் திறனுக்கும் ஏற்ற கல்வி முறையைத் தேர்ந்து எடுக்கும்போது குடும்பங்கள் அவர்களின் விருப்பத்தோடு ஒத்துப்போவதோடு முன்னேற்றத்தை நோக்கி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் திரு சான்.
'முன்னேறு சிங்கப்பூர்' நடவடிக்கை சிங்கப்பூரர்கள் அனைவரும் எவ்வாறு முன்னேற்றத்தில் பங்களிக்கலாம் என்பதை மீண்டும் நினைத்துப் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
"உதாரணத்திற்கு, நம்மில் பலர், எளிதில் பாதிக்கக்கூடியோருக்கும் வசதியற்றோருக்கும் உதவுகிறோம். இருப்பினும் இந்த உதவிக்குக் கிடைக்கக்கூடிய பலன் என்பது சமூகத்தின் எல்லாப் பிரிவினரின் மனப்போக்கையும் செயல்களையும் பொறுத்தது.
"அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பல்வேறு சமூக அமைப்புகளும் ஆதரவு தந்து முக்கிய பங்காற்றி வருகின்றன. சமூக முன்னேற்றக் கட்டமைப்பு என்னும் திட்டம் நாடளவில் நடப்புக்கு வந்துள்ளது. பின்தங்கிய மாணவர்களை ஒருங்கிணைத்து, முறையாக ஆதரிப்பதற்கான சமூக முயற்சிகளை இத்திட்டம் மேம்படுத்துகிறது. ஒவ்வொருவரும் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர் என்பதற்கும் அப்பால் ஆற்றல் பெறும் ஓர் இடமாக சிங்கப்பூர் இருக்க வேண்டும்," என்று திரு சான் தெரிவித்தார்.
'முன்னேறு சிங்கப்பூர்' நடவடிக் கையை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.
நேற்று மாலை நடைபெற்ற தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் 650க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
அடித்தள அமைப்புகளின் தலைவர்களுடன் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திராணி ராஜா, ஆல்வின் டான், எரிக் சுவா, ஜோன் பெரேரா, ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் ஆகியோரும் பங்கேற்றனர்.