சிங்கப்பூரில் ஈராண்டு காலத்திற்குப் பிறகு தீபாவளித் திருநாள் மீண்டும் கோலா கலமாகக் கொண்டாடப்படும்போது வசதி குறைந்த முதியோரை மகிழ்விக்கும் நிகழ்ச் சிகளும் இடம்பெறும். இதற்கு லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்துவருகின்றன.
“நரகாசுரனுக்கும் கிருஷ்ணனுக்கு மிடையே இருந்த போராட்டகாலத்தின் நிறைவாகவும் இருளில் பிறந்த வெளிச்சமாகவும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. அவ்வகையில் கொவிட் -19 கிருமித்தொற்று மக்களின் மீள்திறனை சோதித்த போராட்டமாக அமைந்தது. இக்கிருமித்தொற்று உலகமெங்கும் பலரை பாதித்து வரும் விகிதம் குறையவும், அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்படுவதையும் முன்னிட்டு இவ்வாண்டின் தீபாவளி கொண்டாட்டங்கள் பெருமளவில் நடக்கவுள்ளன,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான அன்பரசு ராஜேந்திரன்.
இம்மாதம் 16ஆம் தேதியன்று லிஷாவும் வசந்தம் ஒளிவழியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒளியூட்டு நிகழ்ச்சியோடு தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடங்கும். அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கவுள்ள விழாவில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார். புராண கதாபாத்திரங்களான நரகாசுரன், கிருஷ்ணா, ராதா ஆகியோரைப் பிரதிநிதிக்கும் உருவபொம்மைகளை லிட்டில் இந்தியாவில் அக்டோபர் 1 அன்று பொதுமக்கள் காணலாம். லிஷாவின் நேற்றைய தீபாவளி செய்தியாளர் சந்திப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
அதே நாளன்று கிளைவ் ஸ்திரீட்டில் குடும்பங்களுக்கான விளையாட்டுப் போட்டி ‘தீபாவளி கேம் சேலஞ்ச்’ என்னும் பெயரில் நடைபெறவுள்ளது. மேலும், தீபாவளி நேரடி சமையல் நிகழ்ச்சியும் மெய்நிகர் பாணியில் பிரபல இந்திய உணவகங்களின் நட்சத்திர சமையல்காரர்களைக் கொண்டு நடத்தப்படும்.
பேருந்துகளிலும் ரயில்களிலும் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வை பிரதி
பலிக்கும் அலங்காரங்களை எஸ்எம்ஆர்டி நிறுவனத்துடன் சேர்ந்து லிஷா பொருத்த உள்ளது. இந்த அலங்காரங்கள், அக்டோபர் 3 முதல் ஆறு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் காணப்படும். போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஹார்பர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் இந்த அலங்காரங்களை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைப்பார்.
‘மிஸ் அண்ட் மிஸஸ் லிஷா சாரி குவீன்’ என்னும் சேலை அழகு ராணிப் போட்டி, தமிழ் ‘ராப்’ இசைப் போட்டி, கலா சார நிகழ்ச்சி லிட்டில் இந்தியாவில் ‘புதையல் வேட்டை’ பாணியில் போட்டி, தீபாவளி பலகாரங்கள் தயாரிக்க கற்றுத்தரும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை லிஷா ஏற்று நடத்த உள்ளது.
சிண்டா அதன் ‘புராஜெக்ட் கிவ்’ எனும் நிதித் திரட்டில் மீண்டும் ஈடுபடவுள்ளது. பலகாரங்கள், தீபாவளிக்குத் தேவையான பொருள்கள் போன்றவற்றைத் தந்து, வசதி குறைந்த குடும்பங்களும் குதூகல உணர்வில் திளைக்க வாய்ப்பளிக்க விரும்புகின்றது சிண்டா.
“ஒவ்வோர் ஆண்டும் முதியோர் தங்க ளது பேரப்பிள்ளைகளுடன் தீபாவளிச் சந்தையில் உள்ள ‘புராஜெக்ட் கிவ்’ பெட்டியில் நன்கொடையளிப்பதை பார்ப்பது மனதை நெகிழ வைக்கும்,” என்றார் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை உரிமையாளரான திரு ராஜ்குமார் சந்திரா.
இவ்வாண்டு ஒரு புது முயற்சியாக வாடகை வீடுகளில் வசிக்கும் முதியோர்அல்லது குறைந்த வருமான முதியோரை லிட்டில் இந்தியாவிற்கு ஓர் உல்லாசப் பயணமாக அழைத்துச் செல்ல சிண்டா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு முதியோரும் ஓர் இளையரோடு சேர்ந்து இப்பயணத்தில் செல்வார்.