பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வியாழக்கிழமை (நவம்பர் 3) நடத்திய பேரணியின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அவருக்குக் காயம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வசிராபாத்தில் திரு கான், 70, பேரணி ஒன்றை வழிநடத்திக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து ஏறக்குறைய 200கி.மீ. தூரத்தில் வசிராபாத் இருக்கிறது.
இம்ரான் கான் காலில் சுடப்பட்டதாகவும் அவர் உயிர் தப்பியதாகவும் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. திரு கான் காலில் மூன்று, நான்கு முறை சுடப்பட்டதாக பிடிஐ கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு இம்ரான் இஸ்மாயில் கூறினார்.
“தானியக்க ஆயுதத்தைக் கொண்டு ஆடவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் சிலர் காயமடைந்துள்ளனர். இம்ரான் கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது,” என்று மற்றோர் உதவியாளர் திரு அசாத் உமர் ராய்ட்டர்சிடம் கூறினார்.
திரு கான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
“அவர் சீரான நிலையில் இருக்கிறார். இது அவரைப் படுகொலை செய்வதற்கான ஒரு முயற்சி,” என்று ஏஎஃப்பி நிறுவனத்திடம் திரு கானின் மூத்த உதவியாளர் திரு ராவூஃப் ஹசன் கூறினார்.
திரு கானின் முழங்கால் தண்டில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததாக பிடிஐ கட்சிப் பேச்சாளர் ஃபவத் சௌத்ரி கூறினார்.
“இம்ரான் கானுக்கும் அவரது கட்சியைச் சேர்ந்த ஃபைசல் ஜாவித்துக்கும் குண்டுக் காயங்கள் ஏற்பட்டன. இம்ரான் கானின் முழங்கால் தண்டில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்,” என்று திரு சௌத்ரி ராய்ட்டர்சிடம் கூறினார்.
“துப்பாக்கிச்சூடு நடத்தியவனை அங்கிருந்தவர்கள் தடுக்காமல் போயிருந்தால், பிடிஐ தலைமைத்துவம் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கும்,” என்றார் அவர்.
ஆடையில் ரத்தக் கறை படிந்த நிலையில் காணப்பட்ட திரு ஜாவித், மருத்துவமனையில் ஜியோ டிவி நிறுவனத்திடம் பேசினார்.
“எங்களுடைய சகாக்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக எங்களுக்குச் செய்தி கிடைத்துள்ளது,” என்றார் அவர்.
துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து பேரணி வாகனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திரு கான், கூட்டத்தினரை நோக்கிக் கையசைத்ததை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட படங்கள் காட்டின.
இந்நிலையில், திரு கான் சுடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ஷபாஸ் ஷரிஃப், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த உள்துறை அமைச்சரிடம் உத்தரவிட்டுள்ளார்.