இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வரும் 31ஆம் தேதி புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கான் நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகளை வெளியிட்டாரா என்று மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நேற்று பரிசீலித்தது. நேரடியாக வந்து விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வேளையில் இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட ஆலோசனையைக் கேட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் கூறியது.
இம்ரான் கான் அரசாங்க அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறி, அவர்மீது நேற்று முன்தினம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவரான இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது தமது உதவியாளர் கைதுசெய்யப்பட்டதன் தொடர்பில் காவல்துறை, நீதிபதி ஆகியோர்மீது வழக்கு தொடுக்கப் போவதாக அவர் கூறி இருந்தார்.
இம்ரான் கான் ஏப்ரலில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பதவி இழந்ததை அடுத்து, பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.
புதிதாக தேர்தலை நடத்தும்படி அவர் அரசாங்கத்தை நெருக்கி வருகிறார்.