வீடு வாங்குவோருக்குக் கட்டுப்படியாகும் வகையிலேயே தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அது தனியார் சொத்து மேம்பாட்டாளர்களைப் போன்று லாபநோக்கில் அணுகப்படுவதில்லை என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்து இருக்கிறது.
பிடிஓ வீடுகளுக்கு அதிக மானியம் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட கழகம், அவற்றின் விற்பனை விலையானது நிலம், கட்டுமானம் உள்ளிட்ட செலவுகளை முழுமையாக ஈடுகட்டுவது இல்லை என்றும் சுட்டியது.
கடந்த 2021-2022 நிதியாண்டில், வீவக விற்பனை செய்த 13,506 புதிய வீடுகளைக் கட்டுவதற்கு மொத்தம் $5.346 பில்லியன் செலவானது.
அதாவது, அவ்வாண்டில் ஒரு வீட்டைக் கட்ட கிட்டத்தட்ட $396,000 செலவானது என்றும் அவற்றின் விற்பனைமூலம் ஒரு வீட்டிற்குக் கிட்டத்தட்ட $365,000 தொகையே கிடைத்தது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பிடிஓ வீடுகளின் விலைமதிப்பு தொடர்பிலும் அவற்றின் கட்டுப்படியாகும் தன்மை குறித்தும் அண்மைக்காலமாக கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அவற்றின் விலை எவ்வாறு முடிவுசெய்யப்படுகிறது என்பது குறித்து வீவக இன்று புதன்கிழமை வெளியிட்ட விரிவான அறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
“வீட்டு விலைகளை நிர்ணயிப்பதில் வீவகவின் அணுகுமுறை முற்றிலும் வேறானது. அது, பிடிஓ வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் சார்ந்திருப்பது இல்லை,” என்று வீவக கூறியது.
கடந்த பத்தாண்டுகளில் பிடிஓ வீட்டுவிலை அதிகரிப்பானது, குடும்பங்களின் வருமான உயர்விற்கு உட்பட்டு இருக்கும் வகையிலேயே கணக்கிடப்பட்டது என்று கழகம் குறிப்பிட்டது.
கடந்த 2012-2021 ஆண்டுகளுக்குள், வேலையில் இருக்கும் ஒருவரின் இடைநிலை குடும்ப வருமானம் 26% கூடியது. அதிலும் குறிப்பாக, இரண்டாம்நிலை குறைந்த வருமானக் குடும்பங்களின் வருமானம் 32 விழுக்காடாக உயர்ந்தது.
ஒப்புநோக்க, அதே காலகட்டத்தில் முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் பிடிஓ வீட்டுவிலை சதுர அடிக்கு 22 விழுக்காடு உயர்ந்தது. அதாவது, 2012ஆம் ஆண்டில் சதுர அடி $479ஆக இருந்த பிடிஓ வீட்டுவிலை, 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் $584ஆக அதிகரித்தது.
முதிர்ச்சியடையாப் பேட்டைகளில் இந்த உயர்வு 16 விழுக்காடாக, அதாவது $311லிருந்து $362ஆக உயர்ந்தது.
பிடிஓ வீடுகளின் விலையானது பல்வேறு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது.
புதிய பிடிஓ வீடுகளின் விற்பனை விலையைத் தீர்மானிக்குமுன் அருகிலுள்ள மறுவிற்பனை வீடுகளின் விலையைக் கருத்தில்கொண்டு புதிய வீடுகளின் மதிப்பை வீவக முடிவுசெய்யும். புதிய பிடிஓ வீடுகளின் விலையானது சந்தை நிலவரத்தையும், ஒவ்வொரு குடியிருப்பின் தனிப்பட்ட அம்சங்களையும் பொறுத்து இருக்கும்.
வீடுகள் அமையும் பகுதி, தளம், குத்தகைக்காலம், வீட்டிலுள்ள அம்சங்கள், அருகிலுள்ள வசதிகள் எனப் பல விஷயங்களை கருத்தில்கொண்ட பின்னரே பிடிஓ வீடுகளின் விலை தீர்மானிக்கப்படுவதாகக் கழகம் விளக்கியது.
ஆகையால், ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு குடியிருப்புப் பேட்டைகளில் பிடிஓ வீடமைப்புத் திட்டடங்களை அறிமுகப்படுத்தும்போது, வீடுகளின் விலை சரிசமமாக இருக்காது என்று கழகம் குறிப்பிட்டது.
ஒவ்வொரு பிடிஓ வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானச் செலவுபற்றிய தகவல்களை வீவகவின் தகவல் இணையப்பக்கத்திலும் (HDB InfoWeb) அரசின் கொள்முதல் இணையவாயிலிலும் (GeBiz) பொதுமக்கள் காணலாம்.
வீடுகளைக் கட்ட ஆகும் செலவையும் அவற்றின் விற்பனைமூலம் கிடைக்கும் வருமானத்தையும் வீவக தனது ஆண்டறிக்கையில் வெளியிட்டு வருகின்றது.