சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு இனி உடனடியாகப் பணம் அனுப்பும் பரிவர்த்தனை முறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூரின் ‘பேநவ்’, இந்தியாவின் யுபிஐ எனப்படும் ‘யுனிபைஃட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்’ இணையவழித் தொடர்புகள் இணைந்து இம்முறையை செயல்படுத்தியுள்ளன.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் இந்திய மத்திய வங்கியும் இணைந்து இவ்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த அம்சம் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
இம்முறையின் கீழ் டிபிஎஸ் வங்கியும் லிக்குவிட் குழுமம் எனும் நிதித் தொழில்நுட்ப நிறுவனமும் இணைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட டிபிஎஸ், பிஓஎஸ்பி வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு $200 வரையிலும் நாளொன்றுக்கு $500 வரையிலும் இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம். இத்தொகை அடுத்த மாதம் 31ஆம் தேதிக்கு பிறகு $1,000 ஆக உயர்த்தப்படும்.
வாடிக்கையாளர்கள் பணம் பெறுவோரின் கைப்பேசி எண், யுபிஐ அடையாள எண் அல்லது மெய்நிகர் கட்டண முகவரியைப் பயன்படுத்தி எளிதாகப் பணம் அனுப்பலாம்.
அதேபோல் இந்தியாவின் ஆக்சிஸ் வங்கி, டிபிஎஸ் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா ஆகிய ஆறு வங்கிகளின் கணக்குகள் மூலம் இவ்வசதியைப் பயன்படுத்தலாம். நாளடைவில் சிங்கப்பூரில் தகுதிபெற்ற பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இதில் இணைக்கப்படும்.
நேற்று நடைபெற்ற இதன் அறிமுக விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணையம்வழி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் ஷக்திகந்தா தாஸ் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையில் வெற்றிகரமாக முதல் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டனர்.
சராரியாக ஆண்டு ஒன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வரை இரு நாடுகளுக்கும் இடையே பணப்பரிவர்த்தனைகள் செய்யப்படும் நிலையில் இவ்வசதி அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமையும் என்றும் விரல்நுனியில் இனி பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும் என்றும் சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
“இதுநாள் வரையில் தங்களுடைய சொந்த நாடுகளில் உடனுக்குடன் பணப்பரிவர்த்தனை செய்ததைப் போலவே இனி சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்யலாம்,” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளையின் தலைமை நிர்வாக அதிகாரி பிரேம்குமார் சிவராஜ், “மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு உடனடித் தேவைகளுக்குப் பணம் அனுப்பவும் பெறவும் இனி தடையிருக்காது,” என்றார்.
வெளிநாட்டு ஊழியரான செல்வகுமார் ராஜேந்திரன், “இனி குடும்பத் தேவைகளுக்கு உடனடியாகப் பணம் அனுப்பலாம் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார். இந்தியாவில் வசிக்கும் பெற்றோருக்கு மாதாமாதம் பணம் அனுப்பும் தனியார் நிறுவன மேலாளர் ஷோபா குமரேசன், “இத்தகைய வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என அடிக்கடி நினைப்பதுண்டு. இனி உடனுக்குடன் பணம் அனுப்பலாம்,” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் நீல் பரேக், “இந்தப் புதிய வசதியை வரவேற்கிறோம், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இது பேருதவியாக இருக்கும்,” என்று கூறினார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பங்காளித்துவம், தொடர்ந்து புத்தாக்கத் தீர்வுகளை முன்னெடுக்கும் என்றும் இருநாட்டு மின்னிலக்கப் பொருளியல்களுக்கும் கூடுதலான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் லீ ஃபேஸ்புக்கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.