புத்ரஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் சம்பவங்கள் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவங்களினால் அரசாங்கத்திற்கு ஏறக்குறைய 2 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சம்பவத்தில் சுங்கத் துறையைச் சேர்ந்த சிலர் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தாலும் இழப்புகள் பெரிய அளவில் இருந்ததாகத் திரு அன்வார் கூறினார்.
“ஊழலையும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நம்மால் ஆன அனைத்தையும் நாங்கள் செய்துவருகிறோம். நாம் பலமுறை வெற்றி அடைந்திருந்தாலும், சுங்கத் துறைச் சம்பவம் போன்றவை உட்பட என்னைப் பாதித்து கவலை அடையச் செய்யும் சில சம்பவங்கள் இன்னும் இருக்கின்றன,” என்று ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் திரு அன்வார் தெரிவித்தார்.
ஊழல் மிக முக்கியமான விவகாரம் என்றும் அதனை நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
“ஊழலைச் சாதாரண விவகாரமாகக் கருதுவோர், அதனால் ஏற்படும் இழப்புகளைக் கவனிக்கவேண்டும். இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை, அது 2 பில்லியன் ரிங்கிட்,” என்று திரு அன்வார் சுட்டினார்.
கடத்தல் நடவடிக்கைகளின் தொடர்பில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் பணியாற்றிய 34 சுங்கத் துறை அதிகாரிகளை கடந்த வாரம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைதுசெய்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், உள்நாட்டு வருவாய் வாரியம், பேங்க் நெகாரா ஆகியவை நடத்திய சிறப்புச் சோதனை நடவடிக்கையில் சந்தேகப் பேர்வழிகள் கைதுசெய்யப்பட்டனர்.
புகையிலை, சிகரெட், மதுபானம், சுகாதாரப் பொருள்கள், வாகன உதிரிப் பாகங்கள் ஆகியவற்றின் கடத்தலுக்கு உதவ, கும்பல் ஒன்றிடமிருந்து அந்த அதிகாரிகள் 4.7 மில்லியன் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக நம்பப்படுகிறது.