கொழும்பு: வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிரமப்படும் ஊழியர்களுக்கு உதவும் விதமாக, குறைந்தபட்ச ஊதியத்தை 40% உயர்த்த இலங்கை அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஆகப் பெரும் சரிவைச் சந்தித்ததால், இலங்கையின் பொருளியல் பெருவீழ்ச்சி கண்டது.
இந்நிலையில், ஏழ்மை நிலையில் இருப்போருக்குக் கைகொடுக்கும் வகையில், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாயிலிருந்து (S$42) 17,500 ரூபாயாக உயர்த்த அமைச்சரவை இணங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“இது மிக முக்கியமான முடிவு. இதன்மூலம் தேசிய அன்றாட ஊதியமும் 200 ரூபாய் உயர்த்தப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மக்கள்தொகையில் கடைநிலையில் இருக்கும் 20 விழுக்காட்டுக் குடும்பங்களின் சராசரி மாதாந்திர வருமானம் 17,572ஆக இருக்கிறது என்றும் ஒட்டுமொத்தத்தில், நாட்டில் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியால் 90% குடும்பங்களின் செலவினம் அதிகரித்துவிட்டது என்றும் அரசாங்கத்தின் அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலகப் பண நிதியத்தின் $2.9 பில்லியன் உதவித் திட்டத்தால் இலங்கைப் பொருளியல் மீண்டு வருகிறது. ஒருகட்டத்தில் 70 விழுக்காடாக உயர்ந்த பணவீக்கம், 2024 பிப்ரவரியில் 5.9 விழுக்காடாக இறக்கம் கண்டது.